“வளர்ச்சியா” “இலவசமா” – எது தமிழகத்திற்கு பொருத்தமானது: மு.க.ஸ்டாலின் பேச்சு

chennai, MK stalin, tamil nadu
சென்னை: ‘இந்தியா டுடே தென்னிந்திய கருத்தரங்கில் ‘”வளர்ச்சியா” “இலவசமா” –  எது தமிழகத்திற்கு பொருத்தமானது’ என்ற தலைப்பில், கழக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரை: இன்று தலைநகர் சென்னையில் ஆக்கபூர்வமான அறிவு சார்ந்த கருத்தரங்கில் பங்கெடுக்க நாமெல்லாம் இந்த மேடைக்கு வந்திருக்கிறோம் என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

இது போன்றதொரு கருத்தரங்கை இங்கு நடத்த முடிவு செய்த இந்தியா டுடே தலைமைக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை தென்னிந்தியாவிற்கு மட்டுமல்ல, சங்க கால பெருமையுடன் மிகச்சிறந்த பண்பாடு மற்றும் கலாச்சாரம் நிறைந்த பூமியாக விளங்கும், கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியும் பெற்ற தமிழகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
இது மாதிரியொரு பயனுள்ள கருத்தரங்கம் தென்னிந்தியாவின் ஆக்கபூர்வமான அரசியல் தளத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

இப்படியொரு சிறப்புவாய்ந்த கருத்தரங்கில், எனக்கு உரையாற்ற கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு “வளர்ச்சியா” “இலவசமா” –  எது தமிழகத்திற்கு பொருத்தமானது என்பதாகும்.

இந்த தலைப்பு தேர்வு செய்யப்பட்டதற்கு- “இலவசம்” பற்றி நடக்கும் திட்டமிடப்பட்ட, இருட்டடிப்பு பிரச்சாரமே காரணமாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

குறிப்பாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தை ஆளும் திராவிட இயக்கம் “இலவசங்களை” வைத்து அரசியல் செய்து வருகின்றன என்ற ஒரு பிரச்சாரத்தின் அடிப்படையில் இது போன்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளதோ என்றே எண்ணுகிறேன்.

திராவிட இயக்கங்கள் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக என்ன மாதிரியான தனித்துவமிக்க முறைகளை கையாண்டார்கள் என்பதை, எடுத்துரைக்க கிடைத்த வாய்ப்பாகவே இந்த மேடையை பார்க்கிறேன்.

போலியான ‘வளர்ச்சி’ முழக்கங்களை தாங்கி பிடிக்கவும், சாதாரண மக்களை திசை திருப்பவும் நீங்கள் “இலவசங்கள்” என்று கூறும் சமூகநல திட்டங்களை பற்றி எடுத்து கூற வேண்டிய கடமை திராவிட இயக்கத்தின் உண்மையான வழித்தோன்றல் என்ற முறையில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உள்ளது.

ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியும், மனித வளர்ச்சி குறியீடுகளான கல்வி, சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு போன்றவற்றையும் உள்ளடக்கியது தான் உண்மையான வளர்ச்சி என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.

அந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் கூட சமூகநலத் திட்டங்களுக்கு எங்கு அதிகம் செலவிடப்பட்டுள்ளதோ, அங்கு அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது என்பதை அடையாளம் காட்டுகின்றன. இது ஏதோ ஒரு நாட்டில் அல்ல- உலக நாடுகள் அனைத்திலுமே இந்த நிலை நிலவுகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

 உதாரணத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்றால்,

– ஸ்கேன்டினேவியன் நாடுகளில் ஒருபுறம் மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகமாகவும், இன்னொருபுறம் சமூக நலத்திட்டங்களுக்கு அதிகமாகவும் செலவிடப்படுகிறது.

– ஒரே நாட்டிற்குள் உள்ள மாநிலங்களை எடுத்துக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் கலிபோர்னியாவில் இதே நிலை இருக்கிறது.

– ஒட்டுமொத்த வளர்ச்சி, தனி நபர் வருமானம், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அளவீடுகள், சமூக ஒற்றுமை, சட்டம் ஒழுங்கு  ஆகியவற்றை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அளவுகோலாக எடுத்துக் கொண்டால் நாட்டிலுள்ள மாநிலங்களில் முதன்மையாக தமிழகமே பல நேரங்களில் இருந்திருக்கின்றது என்பதை நான் இங்கு பெருமையாக சொல்லிக் கொள்கின்றேன்.

இந்த நேரத்தில், நமது திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்றான சமத்துவ கொள்கையின் அடிப்படையில் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் முயன்று வருகிறோம் என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மனிதர்களும் பயன்பெறவில்லை என்றால், எந்த வளர்ச்சி திட்டமும் முழுமை பெறாது என்று உணர்ந்த காரணத்தினால் தான் சமூக பொருளாதார, அரசியல் பார்வைகளோடு கொள்கைகள் வகுக்கப்படுகிறது. அதைதான் நமது அரசியல் சட்டத்தின் முகப்புரையும் (Preamble – ப்ரியாம்பிள்) கூறுகிறது. இதுபோன்ற கருத்துகளையெல்லாம் எடுத்துக் கொண்டு தான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செய்திருக்கின்றது.

எனவே, 2006 லிருந்து 2011-ஆம் ஆண்டு வரை  தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூகநல திட்டங்களில் சிலவற்றை நான் இங்கு பட்டியலிடுகிறேன்.

– வறுமையைப் போக்க “ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி” திட்டம் செயல்படுத்தபட்டு, அதன் மூலம் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பயனடைந்தன. இதன் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்த மக்களின் பசியை போக்கி ஏழ்மை நிலை விரட்டப்பட்டது.

– 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்தோம். இதனால், விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை பெரிதும் குறைந்தது.

– ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 20 லட்சத்து 11 ஆயிரத்து 517 ஏழை மகளிருக்கு நிதியுதவி அளித்தோம்.

– உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டம் வாயிலாக 2 லட்சத்து 70 ஆயிரத்து 265 ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்தோம்.

இதே காலகட்டத்தில் தான்,

– தமிழகத்தின் முதலீடுகள் 3.48 சதவீதம் என உயர்ந்தது.
– இதன் காரணமாக 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீடுகளாக பெறப்பட்டன.

– 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டது.

– வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக தாமிபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.

– மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது.

– கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

– ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற “மெகா” கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

– மகளிருக்கு “பொருளாதார அதிகாரம்” கொடுக்க வேண்டும் என்பதற்காக 4 இலட்சத்து 41 ஆயிரத்து 311 மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, அந்த குழுக்களுக்கு 6 ஆயிரத்து 342 கோடி ரூபாய் கடன் வழங்கினோம்.

– மாணவர்களின் அறிவுப்பசியைப் போக்க 171 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தோம்.

இவையெல்லாம் வளர்ச்சி திட்டங்கள் இல்லை என்றால், எதற்காக “ஆக்ஸ்போர்டு அனால்டிகா” என்ற உலக நிறுவனம், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் “தொழில் தொடங்க மிகச்சிறந்த இடம் தமிழ்நாடு” என்று அன்று கூறியது?

ஆனால் குறை சொல்வோர், குற்றம் சாட்டுவோர் “முட்டையிலிருந்து கோழி வந்ததா” அல்லது “கோழியிலிருந்து முட்டை வந்ததா” என்ற விவாதத்தை முன்னிறுத்தி வாதிட்டுக் கொண்டிருப்பார்கள்.

அதனால் தான் “இலவசம்” என்ற விமர்சனப் போர்வையில், ஒரு அரசின் சிறப்பான வளர்ச்சித் திட்டங்கள் மூடி மறைக்கப்படும் நிலை உருவாகி விடுகிறது என்பதை இந்த மேடையில் வருத்தத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஒரு மாநில வளர்ச்சிக்கும், நாட்டு வளர்ச்சிக்கும் “கோழியும் தேவை. முட்டையும் தேவை” என்பதுதான்.

அதாவது பொருளாதார வளர்ச்சியும் தேவை. சமூக நலத்திட்டங்களும் தேவை என்பதை மறுத்து விட முடியாது. அதுதான் நாட்டு வளர்ச்சிக்கு வழிகாட்டும் மிக முக்கியமான “கலங்கரை விளக்கம்” என்றே கருதுகிறேன்.

இது ஒரு புறமிருக்க,

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இரு முக்கிய அடிப்படைக் கொள்கைகளைப் பார்க்கிறது.- அதில் ஒன்று “சமத்துவம்”. இன்னொன்று “சமூக நல்லிணக்கம்”.

மாநிலத்தின் வளர்ச்சியை இந்த இரண்டையும் தவிர்த்து விட்டுப் பார்க்க முடியாது.  ஏனென்றால் சமூக நலத்திட்டங்களுக்கு என்னதான் செலவு செய்தாலும், சமத்துவமும், சமூக நல்லிணக்கமும் சீர்குலையும் என்றால் “வளர்ச்சி”யை நோக்கி செய்யப்படும் அந்த செலவினங்களால், ஏதும் பலன் இருக்காது  என்பதுதான் வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், இன்று தலைவர் கலைஞரால் வழிநடத்தப்படும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாட்டனார் யாரென்று நீங்கள் கேட்டால்  நீதிக்கட்சி என்று நான் அழுத்தம் திருத்தமாக சொல்வேன்.

நூறாண்டு கண்ட திராவிட இயக்கம் “சமத்துவம்” “சமூக நல்லிணக்க” கொள்கைகளில் இருந்து என்றைக்கும் விலகியதில்லை. ஏன் இந்த இரண்டு கொள்கைகளையும் “இயற்கை நீதி”யின் அங்கங்களாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியத் தேவையாகவும் கருதி திராவிட இயக்கமும் சரி, அந்த வழியில் செயல்படும் திமுகவும் சரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மை நிலையை ஊடகங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று அஞ்சுகிறேன்.

அதனால் தான் “இலவசமா” “வளர்ச்சியா”- எது தமிழகத்திற்கு உதவும் என்ற தலைப்பு ஒன்று இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.

நான் இப்படிப் பேசுவதால் தி.மு.க. “இலவசத்தை” மட்டுமே ஆதரிக்கிறது என்று அர்த்தமா?

நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.

இலவசத்தை நாம் “வீண் செலவு” என்று நினைக்கிறோமா, அல்லது “அர்த்தமுள்ள முதலீடு” என்று கருதுகிறோமா என்பது தான் மிக முக்கியம். அந்த வகையில் நான் இங்கே சில உதாரணங்களை இந்த அறிவுசார் மக்கள் கூடியிருக்கும் அரங்கில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
மதிய உணவிற்காக செலவிடுவது வருங்கால தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு வித்திடும் அர்த்தமுள்ள முதலீடு.

பெருந்தலைவர் காமராஜரால் துவக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் தலைவர் கலைஞர் அந்த திட்டத்தை உண்மையிலேயே “ஊட்டச் சத்து மிக்க” திட்டமாக மாற்றினார். ஆரோக்கியமான உடல் நலத்துடன் ஒரு தலைமுறையை உருவாக்குவது அர்த்தமுள்ள முதலீடுகள் தானே?

அதே போல் முதியோர் உதவி திட்டம், விதவைகள் மறுவாழ்வு திட்டம் எல்லாமே வறுமையின் பிடியில் சிக்கி விடாமல் முதியோரை, ஏழை எளியோரைக் காப்பாற்றும் அர்த்தமுள்ள முதலீடுகள் தானே?

அறிவு வளர்ச்சிக்கும், பொது அறிவு பெறவும் வீடு தோறும் “டி.வி.களை” கழக அரசின் சார்பில் வழங்கினோம். அதுவும் அர்த்தமுள்ள முதலீடுகள் தானே?

அந்த திட்டங்களுக்கான டெண்டர்களை எல்லாம் கூட அனைத்துக் கட்சிகள் குழு அமைத்து வெளிப்படையாகவே முடிவு செய்தோம்.
இந்தியாவிலேயே “எதிர்கட்சிகளும் அமர்ந்து அரசு டெண்டரை முடிவு செய்யும் அளவிற்கு” அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தினோம்.

“அறிவு வளர்ச்சிக்கும்” “வெளிப்படையான நிர்வாகத்திற்கும்” ஒரு முதலீடு உதவும் என்றால் அது அர்த்தமுள்ள முதலீடு தான்.
“அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் வெளிப்படைத்தன்மை”, “ மக்களுக்கு தரமான சேவை” வழங்குவது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரத்தியேக நிர்வாக ஸ்டைல் என்பதை இந்த இடத்தில் நான் துணிச்சலுடன் சொல்ல முடியும்.

பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் சென்றடைந்து “பட்டினிச் சாவுகளை”  ஒழித்தது என முன்பே குறிப்பிட்டேன்.

தமிழகத்தின் பொது விநியோகத்திட்டம் மற்ற மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு “மாடல்” என்று உச்சநீதிமன்றமே சொன்னது.  இது அர்த்தமுள்ள முதலீடு இல்லையா?

ஆகவே ஒரு அரசு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாடுபடுவதே பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக பொருளாதார வளர்ச்சி திட்டங்களின் முழுப் பயனை கிராமத்தில் உள்ள கடைக்கோடி குடிமகனும் அடையும் வரை, சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கான அரசின் செயல்பாடு துணிச்சல் மிகுந்ததாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த “இலவசங்களில்” உள்ள வித்தியாசங்களை, அதன் பின்னனியில் உள்ள சமூக, பொருளாதாரம் தொடர்பான உன்னத நோக்கங்களை நீங்கள் அறிந்தீர்கள் என்றால், இது போன்ற தலைப்பில் விவாதம் நடத்த வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது என்பதே என் தாழ்மையான கருத்து.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சில “இலவசங்கள்” நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை என்பதற்காகவே இதைச் சுட்டிக்காட்டுகிறேன்.

2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் கூட நானே நேரில் சென்று தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதி மக்களையும் சந்தித்தேன்.
“நமக்கு நாமே” என்ற அந்த பயணத்தின் மூலம் விவசாயிகள், வணிகர்கள்,. தொழில் முனைவோர், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள், அடித்தட்டு மக்கள் என அனைவரையும் சந்தித்துப் பேசினேன்.

ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நேரடியாக அறிந்து “தேர்தல் அறிக்கையை” தயாரித்த ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதன் அடிப்படையில் தான் 2016ல் வெளிவந்த “தி.மு.க.”வின் தேர்தல் அறிக்கை அமைந்திருந்தது.
அந்த “தேர்தல் அறிக்கையும்” “சமூக நலத்திட்டங்கள், உட்கட்டமைப்புத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற திட்டங்கள்” என்று மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றது.

இன்னும் சொல்லப்போனால்- 2016 தேர்தல் அறிக்கை வெளிவந்தவுடன் “இலவசம்” என்று கூறி சிலர் தேர்தல் ஆணையத்திடம் கூட முறையிட்டார்கள்.

ஆனால் தேர்தல் ஆணையமே “தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளவற்றிற்கு தேவையான நிதி குறித்து போதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியதே தவிர, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை “இலவசம்” என்று கூறி விமர்சனம் செய்து விடவில்லை.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையே பெற்றது தான் 2016ல் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கை.

ஆகவே வளர்ச்சி திட்டங்களுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடு வித்தியாசமானது என்பது மட்டுமல்ல- இலவசம் வேண்டாம் என்று கூறி பெயரளவில் “வளர்ச்சி” பற்றிப் பேசும் கட்சிகளின் அணுகுமுறையிலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டது என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எங்களது பாட்டனார்- அதாவது நீதிக்கட்சி காலத்தில் இருந்தே எங்களின் கோட்பாடு

-கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது.

-பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் “ஒன்றுபட்ட பொருளாதார வளர்ச்சியை” (mixed economic development) எட்டுவது,
-தொழில் தொடங்க முனைவோருக்கு முழு சுதந்திரம் அளித்து தொழில் முதலீட்டை ஈர்ப்பது.

-அரசின் சேவைகளை தரமாகவும், போதுமான அளவில் சிறப்பாகவும் அனைத்து மக்களுக்கும் வழங்குவது.

-எல்லாவற்றிற்கும் மேலாக- பொருளாதார வளர்ச்சி திட்டங்களால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற பிரத்தியேக “பாதுகாப்பு வளையத்தை” (safety net) உருவாக்குவது போன்ற அனைத்துமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்றே எண்ணுகிறேன்.

“வளர்ச்சி”யை நோக்கி மற்ற கட்சிகள் அறிவிக்கும் திட்டங்களை, கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து நான் விமர்சிப்பது நன்றாக இருக்காது.
ஏனென்றால் அவையெல்லாம் திராவிட இயக்கம் போன்ற வரலாற்று பின்னனியைக் கொண்ட கட்சிகள் அல்ல என்பதால் மட்டுமல்ல-
“வளர்ச்சி” என்று அவர்கள் சொல்லுவது குழப்பமாகவும் இருக்கிறது.
அதே நேரத்தில் அவர்கள் “சொல்லுக்கும் செயலுக்கும்” சம்பந்தம் இல்லாமலும் இருக்கிறது என்பதால்தான் அந்த கட்சிகளின் அறிவிப்புகள் குறித்து நான் விமர்சிக்க விரும்பவில்லை.

ஆனாலும் அடித்தட்டு மக்களை- ஏழை எளிய மக்களை- மெல்ல மெல்ல சாகடிக்கும் இந்த “500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது” என்ற முன்கூட்டியே திட்டமிடாத பிற்போக்குத்தனமான அறிவிப்பை நான் இந்த அரங்கில் கண்டிக்கவில்லை என்றால் ஏதோ தவறு செய்தவன் ஆகி விடுவேன் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த திட்டத்தை முதலில் வரவேற்றது திராவிட முன்னேற்றக் கழகம். நாட்டில் ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க இந்த திட்டம் உதவும் என்று நினைத்தேன்.

ஆனால் மக்கள்- குறிப்பாக கிராமப்புற மக்களும், ஏழை எளியவர்களும், தொழிலாளர்களும் இந்த “பண மதிப்பிழப்பு” நடவடிக்கையால் படும் துயரத்தைக் கண்டு வேதனைப்பட்ட முதல் ஆளும் நான் தான்.
இது மாதிரி ஒரு “எவ்வித முன்னேற்பாடுகளும், திட்டமிடலும் இல்லாத” அவசரமாக அள்ளித் தெளித்த திட்டம் தான் “வளர்ச்சி பற்றி பேசிக் கொண்டிருக்கும்” அந்த கட்சியின் அணுகுமுறை என்றால், அப்படிப்பட்ட அணுகுமுறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எந்த வடிவிலும் உதவாது என்பது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து என்பதை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

நிறைவாக, நான் இந்த அரங்கில் சொல்ல விரும்புவது எல்லாம்- திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை “சமத்துவம்” “சமூக நல்லிணக்கம்” என்ற இரு கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறது.
ஆகவே வளர்ச்சியை உள்ளடக்கியது தான் இலவசம் என்ற கருத்தை உங்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி- அவரவர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல- நம் நாட்டு முன்னேற்றத்திற்கும் – “இலவசமும்- வளர்ச்சி திட்டங்களும்” ஒன்றுக்கொன்று இன்றிமையாதது.

என்னைப் பொறுத்தமட்டில் ஒரு அரசுக்கு “Corporate” என்பதும் தேவை. “Common man”-னும் தேவை.

இரண்டும் நாட்டின் “இரு கண்கள்” என்றால் “Development” என்பதை “நெற்றிக் கண்ணாகவே” நான் பார்க்கிறேன். இந்த முக்கண்ணையும் மனதில் வைத்து- மக்களை பாதுகாக்க, மக்களின் நலன்களை போற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளை யாராவது “இலவசம்” என்று பெயரிட்டு அழைத்தால், அந்த பட்டத்தை நாங்கள் மனமுவந்து சுமக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

English Summary:

Chennai: India Today Indian seminar “development,” “free” – what is appropriate for the State entitled, at the Executive Chairman and Chief Opposition leader MK Stalin addressed

Source: “வளர்ச்சியா” “இலவசமா” – எது தமிழகத்திற்கு பொருத்தமானது: மு.க.ஸ்டாலின் பேச்சு – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top