மோடி அரசு சிக்கலில் இருக்கும் நேரத்தில் அடிக்கும் அத்வானி.. எதிர்க்கட்சிகள் குஷி
BJP, India, lok sabha, New delhi, parliment, politicians December 8, 2016,
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஆளும் பாஜக அரசையும், லோக்சபா சபாநாயகரையும் பாஜக மூத்த தலைவர் அத்வானி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், மூன்றாவது வாரமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளன.
நேற்றும் அமளி:
ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஏதும் இன்றி, பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்படுவதால், மக்களின் வரிப் பணம் வீணாகிறது. மக்களவையில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவையை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
யார் நடத்துகிறார்கள் :
அப்போது அங்கிருந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமாரிடம் சென்று, மக்களவை தொடர்ந்து முடங்கி வருவதற்கு தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மக்களவையை அவைத் தலைவரோ அல்லது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரோ நடத்தவேயில்லை. இரண்டு பக்கமும் உள்ள கட்சியினர்தான் இதை செய்கின்றனர்’ என்றார்.
அத்வானி கோபம்:
இதைத் தொடர்ந்து, அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அனந்த் குமார் ஈடுபட்டார். ஆனால் அத்வானி கேட்கவில்லை. அத்வானியின் கோபமான சத்தம், அருகேயுள்ள மீடியா கேலரியிலிருந்த பத்திரிகையாளர்கள் காதுகளுக்கும் கேட்டது. இதையடுத்து மீடியாக்காரர்கள் அங்கு விரைந்தனர். செய்தியாளர்களை நோக்கிய அத்வானி, தனது கருத்துகளை செய்தியாக பிரசுரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மோடியுடன் மோதல்?
ரூபாய் நோட்டுக்களை சரியாக சப்ளை செய்யாததால் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியிலுள்ளனர். இந்த நிலையில், அத்வானி அதே விஷயத்திற்காக முடக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைமையை சுட்டிக்காட்டி மோடி அரசுக்கு நெருக்கடி தரும் முயற்சியில் இறங்கியுள்ளார். அத்வானி தன்னை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்மொழியவில்லை என்பதற்காக, ஆரம்பம் முதலே மோடியோடு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். மோடி அரசும் அத்வானிக்கு எந்த அமைச்சர் பதவியையும் தரவில்லை. பாஜகவின், வழிகாட்டு குழுவில் சீனியர் தலைவர்களுடன் அத்வானிக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம் :
இதனிடையே ‘மோடியை விளாசிய அத்வானி’ என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அத்வானியின் கருத்தால் பாஜகவுக்குள் பிளவு ஏற்படுமா அல்லது இதற்கு முன்பு அவர் கூறிய கருத்தை போல இலகுவாக கடந்து செல்லப்படுமா என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.
Source: மோடி அரசு சிக்கலில் இருக்கும் நேரத்தில் அடிக்கும் அத்வானி.. எதிர்க்கட்சிகள் குஷி – G-News
Leave a comment
You must be logged in to post a comment.