நடிகர், கதாசிரியர், பத்திரிகையாளர், அரசியல் நையாண்டி, வழக்கறிஞர்… பன்முக ஆளுமை ராமசாமி!
chennai, cho ramaswamy, politicians, tamil nadu December 7, 2016,
சென்னை: மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நடிகர், கதாசிரியர், வழக்கறிஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர்.
சென்னையில் ஸ்ரீநிவாசன்- ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சோ ராமசாமி. சென்னை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளி, லயோலா கல்லூரி மற்றும் விவேகானந்தா கல்லூரியில் கல்வி கற்றார்.
1953-ல் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகவும் சோ பணியாற்றினார்.
சோ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர். 1957-ல் நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார்.
பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். மொத்தம் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ள சோ 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். 4 திரைப்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். 4 தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
‘சோ’வின் முகமது பின் துக்ளக் என்னும் அரசியல் நையாண்டி நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்து வந்தார் சோ. 1999-2005-ம் ஆண்டு காலத்தில் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தார் சோ.
அண்மையில் மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை நேற்று மிகவும் கவலைக்கிடமானது. மூச்சுத் திணறல் அதிகம் ஏற்பட்டு மாரடைப்பால் இன்று அதிகாலை 4.40 மணியளவில் சோ ராமசாமி காலமானார்.
நெருங்கிய நண்பரான ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே சோ உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
Source: நடிகர், கதாசிரியர், பத்திரிகையாளர், அரசியல் நையாண்டி, வழக்கறிஞர்… பன்முக ஆளுமை ராமசாமி! – G-News
Leave a comment
You must be logged in to post a comment.