ஜெயலலிதா மறைவு.. அன்புமணியோடு வந்து டாக்டர் ராமதாஸ் நேரில் அஞ்சலி
chennai, jayalalitha, ramadoss, tamil nadu December 6, 2016,
சென்னை: மறைந்த ஜெயலலிதாவிற்கு தனது மகனும், முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாசுடன் நேரில் வந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், உயர் அதிகாரிகள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சற்று முன்னதாக, பிரதமர் மோடி ராஜாஜி ஹாலுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். 4 மணியளவில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்க உள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் மற்றும் விஐபியினர் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.
இதனிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. மணி ஆகியோர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக, கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்தார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.
Source: ஜெயலலிதா மறைவு.. அன்புமணியோடு வந்து டாக்டர் ராமதாஸ் நேரில் அஞ்சலி – G-News
Leave a comment
You must be logged in to post a comment.