ஜெயலலிதா உடல் நிலை.. வழக்கம் போல் பேருந்துகள் ரயில்கள் ஓடுகின்றன.. இயல்பு நிலை திரும்பியது
apollo hospital, chennai, jayalalitha, politicians, tamil nadu December 5, 2016,
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்றம் உருவான நிலையில், இன்று காலை இயல்பு நிலை திரும்பியுள்ளது. வழக்கம் போல் பேருந்துகள், ரயில்கள் இயங்குகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 2 மாதங்களாக மருத்துவமனையில் உள்ள அவருக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்தத் தகவலை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதற்றம் உருவானது. இதனால் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஒரு அசாதரண சூழல் உருவானது. இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் இயல்பு திருப்பியுள்ளது.
ஓடும் பேருந்துகள் :
ஜெயலலிதாவின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதாக வெளியான தகவலை அடுத்து நேற்று 9 மணிக்கு மேல் சட்டென்று அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்ல தயாரானவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று காலை முதல் தமிழக முழுவதும் பதற்றம் சற்று குறைந்து பேருந்துகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன.
பாதிப்பில்லாத ரயில் சேவை :
நேற்றில் இருந்தே, ரயில் சேவையில் எந்த வித மாற்றமும் இல்லை. அனைத்து ரயில்களும் தாமதம் இல்லாமல் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே போன்று சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ரயில்கள் வழக்கம் சென்று கொண்டிருக்கின்றன. பாதிப்பு எதுவும் இன்றி மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
கடைகள் திறப்பு :
தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் அனைத்தும் கடைகளும் திறக்கப்பட்டு வழக்கமான இயல்புநிலை திரும்பியுள்ளது. திருச்சி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், இன்று அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறப்பு:
கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்த பின்னரும், மக்களிடம் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் அரசு பள்ளிகள் இன்றும் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளி நிர்வாகங்கள் மட்டும், கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளன.
திறக்காமல் உள்ள சில பெட்ரோல் பங்குகள் :
பெட்ரோல் பங்குகளைப் பொருத்தவரை இன்றும் சில திறக்கப்படாமல் உள்ளன. பல இடங்களில் நேற்று மூடப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் அச்சத்தின் காரணமாக திறக்கப்படாமலேயே உள்ளன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
1 லட்சம் போலீசார் பாதுகாப்பு:
தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று யாரும் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் போலீசாருக்கு காவல் துறை உத்தரவிட்டிருந்தது. எந்த இடத்திலும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Source: ஜெயலலிதா உடல் நிலை.. வழக்கம் போல் பேருந்துகள் ரயில்கள் ஓடுகின்றன.. இயல்பு நிலை திரும்பியது – G-News
Leave a comment
You must be logged in to post a comment.