பதான்கோட்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர் சுட்டுக் கொலை
India, india terrorism, pakistan December 4, 2016,
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள திண்டா சோதனைச் சாவடி அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நபரை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து பஞ்சாப் மாநில போலீஸ் அதிகாரி ஒருவர், பதான்கோட்டில் தெரிவித்ததாவது:
பமியால் பகுதி அருகே, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நபரை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றனர்.
இதனிடையே, ஆயுதம் தாங்கிய நபர்கள் 4 அல்லது 5 பேர் பதான்கோட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடி வருவதாக உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் போலீஸாரும் ராணுவ அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநில எல்லைகளில் அமைந்துள்ள மலைப் பகுதிகளில் சிறப்பு ஆயுதப் படை வீரர்கள் உள்பட 250 பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றபோது, அவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலில், 6 பயங்கரவாதிகளும் 7 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
Source: பதான்கோட்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர் சுட்டுக் கொலை – G-News

Leave a comment
You must be logged in to post a comment.