கையில காசு "கரைபுரண்டோட" இன்னும் 6 மாதம் ஆகுமாம்.. "குண்டு" போடும் வங்கி ஊழியர் சம்மேளனம்
bank, central government, tamil nadu December 2, 2016,
சென்னை : ரூபாய் நோட்டு பிரச்சனைத் தீர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த உண்மையை மத்திய அரசு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த மாதம் 8 தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என அறிவித்தார்.
மோடியின் இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அன்றாட செலவுக்குகூட பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து 20 நாட்களுக்கு மேலாகியும் வங்கிகள் மற்றும ஏடிஎம் மையங்களில் மக்கள் பணம் எடுக்க காத்துக்கிடக்கின்றனர்.
பணம் இல்லாமல் திணறல் :
வங்கிகளும் ஏடிஎம் களும் போதிய பணம் இல்லாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் ரூபாய் நோட்டு பிரச்சனை தீர 6 மாதங்கள் ஆகும் என வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அச்சிடவே 6 மாதம் பிடிக்கும்:
இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்க கிருஷ்ணன் கூறுகையில், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக தேவைப்படும் பணத்தை அச்சிட 6 மாதம் ஆகும்.
பெயரளவுக்குப் பணம் கொடுத்துள்ளனர்:
வங்கிகளுக்கு பெயரளவு மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. நிலைமை சகஜமாக நிச்சயம் 6 மாதம் பிடிக்கும்.
மத்திய அரசு உண்மை பேச வேண்டும்:
இந்த உண்மையை மக்களுக்கு மத்திய அரசுதான் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கிகளில் மோதல் வெடிப்பைத் தவிர்க்க முடியாது என்றும் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.