வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ கஞ்சா பறிமுதல்.. கோவையில் தம்பதி கைது
kovai, tamil nadu, Tamilnadu Police December 2, 2016,
கோவை: கோவையை அடுத்த சூலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கஞ்சா விற்பனை குறித்து விசாரிக்க சூலூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கருமத்தம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் வசித்து வரும் ரவி – தேன்மொழி வீட்டில் நேற்று இரவு சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மூட்டை, மூட்டையாக கஞ்சா அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பின்னர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளதும் தெரிய வந்தது. அந்த இடங்களில் சோதனை நடத்த போலீசார் விரைந்துள்ளனர்.
போலீசாரிடம் சிக்கிய ரவி, தேன்மொழி ஆகியோர் பெரிய நெட்வொர்க் மூலம் கஞ்சா விற்பனை நடத்தி வந்துள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை செய்து வந்துள்ளனர். பிடிபட்ட தேன்மொழி மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தேன்மொழியின், சகோதரி மற்றும் அவரது கணவர் சொக்கன் தேனி மாவட்டத்தை சேர்ந்த மிகப்பெரிய கஞ்சா வியாபாரி என்றும் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English summary:
More than 1000 kg of ganja have been seized from kovai, police arrested for couple.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.