நடுக்கடலில் தத்தளித்த 73 மீனவர்கள் மீட்பு… இன்னும் 20 பேரை தேடும் பணி தீவிரம்
fisherman, nagapattinum, tamil nadu December 2, 2016,
நாகை: கடந்த 25ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 93 பேர் கரை திரும்பவில்லை. நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல் வந்ததை அடுத்து உள்ளூர் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் 73 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் கிச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கோடியக்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 93 பேர் மீன் பிடிக்க கடந்த 25ம் தேதி கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் கரை திரும்பவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருந்த நிலையில், 73 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பலத்த மழை கடலோர மாவட்டங்களில் பெய்தது. இன்று அதிகாலை நாடா புயல் காரைக்கால் அருகில் கரையைக் கடந்தது. புயல் உருவாகியதால் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. இந்த எச்சரிக்கைக்கு பிறகு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லாமல் இருந்தனர்.
ஆனால், 25ம் தேதியே கடலுக்குள் சென்ற 93 மீனவர்கள் கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. நாடா புயலால் கடலுக்குள் சென்றவர்களுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த உறவினர்கள் இதுகுறித்து புகார் ஒன்றையும் அளித்தனர்.
இந்நிலையில், காணாமல் போன மீனவர்கள் கோடியக்கரைப் பகுதியில் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனால் உள்ளூர் மீனவர்கள் தாங்களாகவே கரை திரும்பாத மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படைகளும் ஈடுபட்டது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணியின் மூலம் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 73 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கரை திரும்பியுள்ளனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீதியுள்ளவர்களை 20 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.