தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை தேவை- ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வைகோ கோரிக்கை
jallikattu, MDMK, politicians, tamil nadu, vaiko, vidyasagar rao December 2, 2016,
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவர பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக வைகோ அறிவித்திருந்தார். இதற்கு மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகட்சிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதனால் மக்கள் நலக் கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே வைகோ இத்தகைய கருத்துகளை பேசிவருகிறார் எனவும் கூறப்பட்டது.
திடீர் சந்திப்பு:
இந்த நிலையில் இன்று திடீரென தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை வைகோ சந்தித்து பேசினார். இது தொடர்பாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிள்ளைகளைப் போல காளைகள்:
தமிழகத்தில் ஜல்லிகட்டு காளைகள் பிள்ளைகளைப் போல வளர்க்கப்படுகின்றன. காளைகளுக்கு சாராயம் ஊற்றுகிறார்க என்பதெல்லாம் பொய்.
ஆடு கோழி வெட்ட தடையா?
மிருகவதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுவுக்கு தடை விதித்திருப்பது நியாயம் அல்ல. ஆடு, கோழிகளை துண்டாக வெட்டுவதும்கூட மிருகவதைதான். அதனால் நாடு முழுவதும் ஆடு, கோழிகள் வெட்ட தடை விதிக்க முடியுமா?
ஜல்லிக்கட்டு அவசியம்:
காரில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்காக கார்களே கூடாது என தடை விதித்துவிட முடியுமா? என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஜல்லிக்கட்டுவின் முக்கியத்துவம் குறித்து விவரித்தேன். பிரதமரை நேரில் சந்திக்கும் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துங்கள் எனவும் கோரிக்கை வைத்தேன்.
இவ்வாறு வைகோ கூறினார்
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.