சட்டசபை குழுக்கள் விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!
dmk, politicians, stalin, tamil nadu, tamil nadu politics December 2, 2016,
சென்னை: சட்டசபை குழுக்களை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான முக ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க உள்ளார்.
எதிர்க்கட்சிகளைக் கொண்ட சட்டசபை குழுக்களை தமிழக அரசு இதுவரை அமைக்கவில்லை. இந்த குழுக்களை உடனே அமைக்க வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இந்த விவகாரத்தில் சபாநாயகர் எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் சபாநாயகருக்கு எதிராக ஆளுநரிடம் புகார் தர ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், இன்று மாலை ஆளுநரை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
ஆளுநரிடம் புகார் கொடுத்த பின்னரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சட்டசபை கூடும் போது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.