பறக்கும் படையாக பன்னீர் டீம்: பணம் கொடுக்க தடுமாறும் அமைச்சர்கள்
bi-election, chennai, O paneer selvam, R.K.nagar, tamil nadu March 28, 2017,
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடுகிறேன்; வெற்றி பெறுவேன் என்று, சசிகலா அணியின் வேட்பாளர் தினகரன், தைரியமாக சொல்லி வந்தாலும், உள்ளுக்குள் கடும் உதறலில் இருப்பதாக கூறப்படுகிறது.
போன் உத்தரவு:
ஒவ்வொரு முறை தேர்தல் பிரசாரத்துக்கு புறப்படுவதற்கு முன்னும், களத்தில் இருக்கும் அத்தனை அமைச்சர்களுக்கும் போன் போட்டு பேசுகிறார்.இன்றைக்கு எந்தப் பகுதிக்குச் சென்றீர்கள்? எவ்வளவு பேரை பார்த்தீர்கள்? எவ்வளவு பேருக்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விவரங்களையெல்லாம் கேட்கிறார். துவக்கத்தில் உற்சாகமாக பதில் அளித்த அமைச்சர்கள், சில நாட்களாக, தினகரன் கேட்கும் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளிக்க முடியாமல் தடுமாறி வருவதாகக் கூறப்படுகிறது.
காரணம், அமைச்சர்கள் எங்கு பணம் கொடுக்கச் சென்றாலும், அந்தப் பகுதியில் முன் கூட்டியே, பன்னீர் தரப்பு ஆட்கள் குவிந்து விடுகின்றனர். பல இடங்களில் மக்களை வளைக்கவும் முடியாமல், பணம் கொடுக்கவும் முடியாமல் அமைச்சர்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து, அமைச்சர் ஒருவர் கூறியதாவது:பணம் கொடுத்தால், நிச்சய வெற்றி என்று தினகரன் நினைத்துக் கொண்டு இடைத்தேர்தல் களத்துக்கு வந்து விட்டார். பணம் வாங்குகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பணம் கொடுப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. பன்னீர்செல்வம் தரப்பினரும், நேற்று வரை நம்மோடு இருந்தவர்கள் தானே. கட்சியினர் அவ்வளவு பேரும், அவர்களிடமும் இன்றளவிலும் தொடர்பில் இருக்கின்றனர்.
பணம் கொடுக்க முயற்சி:
மக்களுக்கு பணம் கொடுக்க, என்னதான் ரகசியமாக திட்டம் போட்டு செயல்பட்டாலும், பன்னீர்செல்வம் தரப்பினர், குறிப்பிட்ட ஏரியாவுக்கு, நாம் போய் சேர்வதற்கு முன்பாகவே சென்று விடுகின்றனர். நாம் போகும் போது, நம்மை பணம் கொடுக்கவிடாமல் தடுக்க அவர்கள் தயாராக இருக்கின்றனர். பல இடங்களிலும் இப்படி ஆகி விட்டது. பறக்கும் படை போல பன்னீர்செல்வம் அணியினர் செயல்படுகின்றனர். மதுசூதனன் லோக்கல் வேட்பாளர் என்பதால், நம்மைக் காட்டிலும் தொகுதிக்குள் அவர்கள் பலமாக உள்ளனர். இந்த யதார்த்தத்தைச் சொன்னால், தினகரன் புரிந்து கொள்வதில்லை. கோபப்படுகிறார். பணத்தை செலவழிக்க, அமைச்சர்கள் தயங்குவது போல நினைக்கிறார். இதற்கெல்லாம் என்ன செய்வதென்றே புரியவில்லை.இவ்வாறு அந்த அமைச்சர் புலம்பித் தீர்த்தார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.