கமல் ஆதரவுடன் களமிறங்கும் விஷால்…!

Uncategorized

கமல்  ஆதரவுடன்  தயாரிப்பாளர்  சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால். தலைவர்  பதவிக்கான வேட்பு மனுவில் விஷாலை ஆதரித்து கமல் முன்மொழிந்து கையொப்பமிட்டுள்ளார். இதனால் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வார இதழ் மற்றும் தொலைக்காட்சிக்கு நடிகர் விஷால் பேட்டியளித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில்  இருந்து கடந்த 2016 நவம்பர் 14-ம் தேதி அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம். அதை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்தார். அதில், ‘‘தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் மார்ச் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அதில் ‛எனது  பேச்சு யாருக்காவது வேதனையை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ‛‛பஞ்சாயத்துக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இது ஒரு சாதாரண விஷயம். இதற்காக இடைநீக்கம் என்பது சரியான முடிவாக இருக்காது. இது தொடர்பாக நீங்களே சுமுகமான முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் உத்தரவிடுகிறோம். உங்கள் முடிவை 3-ம் தேதி காலை 10.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 3) காலை கூடிய தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில், விஷால் மீண்டும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதையடுத்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார் விஷால். அவருக்கு  ஆதரவாக வேட்புமனுவில் கமல் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கெனவே விஷால், நடிகர்  சங்கச் செயலாளராகவும் இருந்து  வருகிறார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட விஷாலுக்கு  நீதிமன்றம் தடை விதித்திருந்ததால் அவரது  அணி  சார்பாக குஷ்புவை நிறுத்துவது  என்றுதான்  முடிவு  செய்து இருந்தனர். ஆனால்  5 மாநில தேர்தல் பிரசாரத்துக்கு  செல்ல  வேண்டி இருந்ததால் குஷ்பு இதில் போட்டியிடவில்லை. இதையடுத்து கமல், தனுஷ், டி.ராஜேந்தர் உள்ளிட்டர்களை விஷால் தரப்பினர் அணுகினர். அவர்களும் பல்வேறு காரணங்களால் போட்டியிட மறுத்துவிட, கடைசியில் தானே களம் இறங்கி விட்டார் விஷால்.  

 இதுபோக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முன்னாள் தலைவர் கேயார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைவர் பதவிக்கு  போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. இதன்மூலமாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத்  தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக வேலை பார்த்த ஜே.கே.ரித்திஷ் இந்தமுறை அவருக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளார். தலைவர்  பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான ராதாகிருஷ்ணனை ரித்தீஷ் ஆதரிப்பதால் இந்தமுறை போட்டி கடுமையாக  இருக்கும் என்கின்றனர். 

– பிரம்மா 

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top