“மே மாதத்துக்குள் நியமிக்காவிட்டால்..” அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

tami nadu

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்’ என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

வழக்கு விசாரணையின்போது அறநிலையத் துறை தரப்பில், “மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து திருநெல்வேலி, நாகப்பட்டினம், நாமக்கல் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும். மீதமுள்ள 11 மாவட்டங்களில் மே மாத இறுதிக்குள் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படும்” என உறுதியளிக்கப்பட்டது.

image

இதை பதிவு செய்த நீதிபதிகள், “மே மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படாவிட்டால் அறநிலையத் துறை செயலாளரும், ஆணையரும் ஆஜராக வேண்டி வரும்” என எச்சரித்தனர்.

மேலும் நீதிபதிகள், “அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அறங்காவலர் நியமன பணிகளை கண்காணிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார்” எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இவ்வழக்கில் மாவட்ட குழுக்களில் அரசியல் கட்சியினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரியலூர் மாவட்ட குழுவில் இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் தரப்பில், ‘அரசியல் கட்சியை சேர்ந்த கடவுள் பக்தி உள்ளவரை நியமிக்கலாம்’ என கூறப்பட்டது. மேலும், ‘இந்து அல்லாதவர் நியமிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்து தனியாக தான் வழக்கு தொடர முடியும். இந்த வழக்கில் அதை விசாரிக்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> “மே மாதத்துக்குள் நியமிக்காவிட்டால்..” அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Search

Back to Top