குமரியில் பாரத மாதா கோயில் இன்று திறப்பு : பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

bharat mata temple, kanyakumari, narendra modi, tamil nadu
கன்னியாகுமரி : குமரியில், இன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம், பாரத மாதா கோயிலை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.

கன்னியாகுமரி, விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.25 கோடி செலவில் பாரத மாதா கோயில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் , 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி கூடம் முன்பு, 27 அடி உயர வீர அனுமன் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இது 12.5 டன் எடையும், 27 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டதாகும். இதனை இன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.

சித்திர கண்காட்சி கூடத்தின் மேல்மாடியில் பாரதமாதா திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 5.5 டன் எடையும், 15 அடி உயரமும் கொண்ட பாரத மாதா வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. கோயிலின் உள்புறமாக, 18 அடி நீளம் 12 அடி அகலத்தில் மூன்று முப்பெரும் சித்திரங்களாக ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர், சீதை ஆகியோர் சிவலிங்க பிரதிஷ்டை செய்யும் காட்சி, பத்மநாபசாமி அனந்தசயன காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் 12 வண்ண ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

பாரத மாதா கோயிலில், சிதம்பரம் தில்லை நடராஜர் சிலை, பகவதி அம்மனின் தவக்கோல காட்சி, சுவாமி விவேகானந்தர் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரங்கத்தின் நடுவில், ‘ஓம்’ என்ற எழுத்துடன் பாரத நாட்டின் வரைபடமும், மாதா அமிர்தானந்தமயி தேவியின் சித்திரமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில், வால்மீகி ராமாயணத்தின், 108 முக்கிய சம்பவங்கள், 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. கோயிலின் முகப்பு பகுதியில் நீருற்றுடன் கூடிய பூங்காவும், பூங்காவின் உள்ளே, 32 அடி உயரத்தில் சிவபெருமானின் தவக்கோல காட்சி சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிவபெருமானின் தலையில் இருந்து கங்கை நதி பாய்வது போன்றும், சிலையின் கீழ் உள்ள நீருற்றில் 8 அன்ன பறவைகள், 4 யானைகள், 4 கந்தவர்கள் சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவின் உள்ளே பசு – கன்று, மான், கொக்கு போன்ற சிலைகளும் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.

திறப்பு விழாவில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீர அனுமன் சிலை முன் மின்விளக்கேற்றுகிறார். ராமாயண கதை குருஜி ஸ்ரீமத் மொராரி பாபு, ராமர் பாதம் முன் திருவிளக்கு ஏற்றி புஷ்பாஞ்சலி செய்கிறார். விவேகானந்த கேந்திர தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கி, பாரத மாதா கோயிலில் திருவிளக்கு ஏற்றி வைக்கிறார். மேலும், வெள்ளிமலை, விவேகானந்த ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, விவேகானந்த கேந்திர நிறுவனர் ஏக்நாத் ரானடே உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

English summary:

Kanyakumari: telephoto lens, video display at 5pm today, Prime Minister Narendra Modi will inaugurate the Bharat Mata temple. 

Source: குமரியில் பாரத மாதா கோயில் இன்று திறப்பு : பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top