சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் எதிர்ப்பு

India, kolkata high court karna, New delhi, supreme court
புதுடில்லி: எனது வாழ்க்கையையும், பதவியையும் கெடுக்கவே, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.

ஆஜரில்லை:

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு, அவர், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் கடிதங்களை அனுப்பினார். இதனை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக கர்ணனுக்கு இரண்டு முறை உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

உத்தரவு:

இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கர்ணன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆவணத்தை செலுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையில்லை:

பத்திரிகையாளர்களிடம் கர்ணன் கூறியதாவது: பிடிவாரன்ட் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடுவேன். வாரன்ட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பேன். வாரன்ட் பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன். சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். புகார் தொடர்பாக எந்தவித ஆலோசனை, விசாரணையில்லாமல் எனக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. நான் தலித்தாக இருப்பதால் எனக்கு நெருக்கடி ஏற்படுகிறது. எனது வாழ்க்கையையும், பதவியையும் கெடுக்கவே தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top