மின்வேலி தாக்கி 3 யானைகள் பலியான விவகாரம்: குட்டியானைகள் இருப்பிடம் பற்றி வனத்துறை தகவல்

tami nadu

மின்வேலியில் சிக்கி யானைகள் பலியான விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் முரளிதரன் மற்றும் சொக்கலிங்கம் தரப்பில் “தருமபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியானதையடுத்து உயிர் தப்பிய இரு குட்டி யானைகளையும், யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இரு குட்டி யானைகளையும் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்காததால் அவை தற்போது எங்கிருக்கின்றன என்பதே தெரியவில்லை” என புகார் தெரிவிக்கப்பட்டது.

image

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “தற்போது இரு குட்டி யானைகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்றுடன் சேர்ந்துள்ளன. இதுசம்பந்தமான புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பின்னர், மின்வேலியில் சிக்கி விலங்குகள் பலியாவதை தடுக்க உரிய விதிமுறைகளை அமல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக ஏப்ரல் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கும் உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> மின்வேலி தாக்கி 3 யானைகள் பலியான விவகாரம்: குட்டியானைகள் இருப்பிடம் பற்றி வனத்துறை தகவல்

Search

Back to Top