ஜெ., இருந்தபோதே முதல்வராக பதவி ஏற்றது ஏன்? பன்னீரை கேட்கிறார் தம்பிதுரை
cm, Coimbatore, O paneer selvam, tamil nadu, thambidurai March 4, 2017,
கோவை: ”மருத்துவமனையில் ஜெ., இருந்தபோதே, எம்.எல்.ஏ.,க்களிடம் கையெழுத்து வாங்கி, முதல்வராக பன்னீர் பதவி ஏற்றது ஏன்,” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தம்பிதுரை.
லோக்சபா துணை சபாநாயகரும், அ.தி.மு.க.,வின் மூத்த தலைவருமான தம்பிதுரை, கோவை விமான நிலையத்தில், நேற்று(மார்ச் 3) பேட்டியளித்தபோது கூறியதாவது: ‘சசிகலாவை அ.தி.மு.க., பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது’ என்று தேர்தல் கமிஷனிடம் புகார் அனுப்பியுள்ளனர். இந்த புகாரை அனுப்பிய பன்னீர் செல்வம், அப்போது கட்சியின் பொருளாளராக இருந்தார்; மதுசூதனன், அவைத்தலைவராக இருந்தார்.
பொதுக்குழுவை முறைப்படி கூட்டி, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தான், பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பான ஆவணத்தில், பன்னீரும், மதுசூதனனும் கையெழுத்திட்டுள்ளனர். இப்போது, திடீரென, பொதுச் செயலாளரை தேர்வு செய்தது தவறு என்று சொன்னால், அதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.
ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக இப்போது பன்னீர் செல்வம் கூறுகிறார். தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் இறந்தபோது, நெடுஞ்செழியன் தான், இரு முறையும் தற்காலிக முதல்வராக பதவி வகித்தார். அதன் பின்பே சட்டசபையை கூட்டி, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால், ஜெ., இருந்தபோதே, எம்.எல்.ஏ.,க்களிடம் கையெழுத்து வாங்கி, முதல்வராக ஏன் பதவி ஏற்றார் என்ற மர்மத்தை பன்னீர் செல்வம் விளக்க வேண்டும். மருத்துவமனையில், ஜெ., இருந்தபோது, பதவி ஏற்க மாட்டேன்; சட்டசபையைக் கூட்டி, முதல்வரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அவர் ஏன் சொல்லவில்லை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, தம்பிதுரை தெரிவித்தார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.