போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள்…?
Uncategorized February 5, 2017,
அதிமுக-வின் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியின் அமைச்சர்களை போயஸ் கார்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். இதனையடுத்து, தற்போது அதிமுக அமைச்சர்கள் போயஸ் கார்டனில் கூடியுள்ளதாக தகவல் வந்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு சீக்கிரமே வரவுள்ள நிலையிலும், வரும் 9-ம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என தகவல்கள் கூறப்பட்ட நிலையிலும், தற்போது போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள் கூடியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 'கட்சி விதிகளின்படி ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாதவர்கள், பொதுச் செயலாளர் ஆக முடியாது. 2011-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா. வரும் மார்ச் மாதம்தான் ஐந்தாண்டு நிறைவடைகிறது. கட்சி உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டுத்தான் பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்ய முடியும். கட்சியின் கொள்கை விதிகள் முறையாகக் கடைபிடிக்கப்படவில்லை' என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா. சசிகலா புஷ்பாவின் மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் நேற்று, 'அதிமுக சசிகலா புஷ்பாவின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளது. அதேபோல, சொத்துக் குவிப்பு வழக்கிலும் சீக்கிரமே தீர்ப்பு வரவுள்ள நிலையில், தற்போது போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள் கூடியுள்ளதாக வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
இன்று மாலை அதிமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.