பிப்ரவரி 9-ல் பதவியேற்கிறார் சசிகலா! ஸ்டாலின் எதிர்ப்பு; திருமாவளவன் வரவேற்பு!!
Uncategorized February 5, 2017,
ஒருவழியாக அனைவரும் எதிர்பார்த்தபடியே அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரான வி.கே. சசிகலா, சென்னையில் நடைபெற்ற அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களால், சட்டமன்றக் கட்சித் தலைவராக, அதாவது முதல்வர் பதவி ஏற்பதற்கான கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 5-ம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, இந்த விண்ணுலகை விட்டு மறைந்தார். அந்த சர்ச்சைக்குள் இப்போது நாம் செல்லவில்லை. செப்டம்பர் 22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி, தி.மு.க-வின் இப்போதைய செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரை ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும், மடாதிபதிகளும் வந்து பார்த்துச் சென்றனர். அனைவரும் ஒருமித்த கருத்தில் தெரிவித்தது, முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர் என்பதுதான். அதிலும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஒருபடி மேலே போய்… "லண்டன் டாக்டரிடம் பேசினேன். முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்" என்று நம்பிக்கையோடு கூறினார்.
அவர் நம்பிக்கை, கடந்த சட்டமன்றத் தேர்தலில், "மக்கள் நலக் கூட்டணி அமோக வெற்றிபெறும்" என்று தெரிவித்ததைப் போன்று வீணாகிப் போனது. சரி, முதல்வர் உடல்நலம் குன்றி மரணம் அடைந்ததாகவே ஒப்புக் கொண்டாலும், அவருடன் 32 ஆண்டுகள் ஊழியராக, தோழியாக… வீட்டு நிர்வாகத்தை கவனிப்பவராக இருந்தவர் என்ற காரணத்திற்காகவே… அ.தி.மு.க பொதுச் செயலாளராக தாங்கள்தான் பதவியேற்க வேண்டும் என தமிழகம் முழுவதும் இருந்து, கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும், ஏராளமான தொண்டர்களும், 'சின்னம்மா' சசிகலாவை கேட்டுக் கொண்டதாலேயே அவர் அப்பதவியை கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஏற்றுக் கொண்டார்.
பொதுச் செயலாளராக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டதும் பேசிய தனது கன்னிப் பேச்சில் (எழுதி வைத்துப் படித்தது), "அக்கா கோட்டைக்கு கிளம்பிட்டீர்களா? மதியம் சாப்பாட்டிற்கு என்ன சமைக்க வேண்டும்?" என்றெல்லாம் கேட்பார்களாம். இடையில், கண்ணீரை வேறு துடைத்துக் கொண்டே பேசிய உரையை தமிழகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன.
டிசம்பர் 31-ம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா, ஜனவரி முதல்வாரத்திலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ தமிழக முதல்வராக திட்டமிட்டிருந்தார். அதற்குள் ஜல்லிக்கட்டு பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையில் முடியவே அதுவே அரசுக்கும், காவல்துறைக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது. இந்த நேரத்தில் தான், இப்படியே போனால், நாம் முதல்வர் பதவி ஏற்பது கானல் நீராகி விடுமோ என்ற கவலையில், சசிகலா, அவரது கணவர் நடராஜன் மற்றும் அவர்களின் உறவுகள் ஒன்றுகூடி, இந்த முறை எப்படியும் சசிகலாவை முதல்வராக்கி விட வேண்டும் என்று முடிவெடுத்தனர். தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான ஒ.பன்னீர் செல்வத்தின் பதிலுரையுடன் முடிந்த கையோடு, எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது.அதன்படி, எல்லாம் சொல்லி வைத்தாற்போல, முதல்வர் ஒ.பி.எஸ் உள்பட அனைத்த அமைச்சர்களும், காலையில் போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை நடத்தினர். பின்னர் திட்டமிட்டபடி, பிற்பகலில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முதல்வரும், கட்சியின் பொருளாளருமான ஒ.பன்னீர் செல்வம் முன்மொழிய, சசிகலா சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அடுத்த சில நாட்களில் அதாவது வரும் 9-ம் தேதி சசிகலா தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்பார் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யார் என்ன சொன்னாலும், சசிகலா முதல்வர் பதவியேற்பது உறுதி. இதற்கு வசதியாக, ஓரிரு நாளில் ஒ.பன்னீர் செல்வம், தமிழக ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பதுடன், சசிகலா தன்னை பதவியேற்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு மத்திய அமைச்சர்கள் அல்லது பிரதமர் மோடியைச் சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கக் கூடும் என்று தெரிகிறது. ஆளுநர் நிராகரித்தால் மட்டுமே சசிகலா முதல்வர் பதவியேற்பதில் இருந்து தடுக்க முடியும்.
மக்கள் விரோதச் செயல் – ஸ்டாலின்

இதற்கிடையே, சசிகலா அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், "மக்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தார்கள் என்றாலும், முதல்வராக இருந்த ஜெயலலிதா, கட்சியிலோ அல்லது ஆட்சியிலோ சசிகலாவுக்கு எந்தப் பதவியும் அளிக்கவில்லை. இது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றாலும், முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஏன் பதவி விலக வேண்டும் என்று கேள்வி எழுகிறது. மக்கள் விரோதமாக இந்த செயல் அமைந்துள்ளது. இதனை எதிர்காலத்தில், தி.மு.க ஜனநாயக அடிப்படையில் எதிர்கொள்ளும்" என்று கூறினார்.ஆனால், தி.மு.க சட்டமன்றக் கட்சி துணைத் தலைவர் துரை முருகன் கூறுகையில், அ.தி.மு.க-வுக்கு மெஜாரிட்டி உள்ளது. சசிகலாவை அந்தக் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூடி தேர்ந்தெடுத்துள்ளனர். இது அந்தக் கட்சியின் உட்கட்சி விவகாரம். இதில் நாங்கள் என்ன கூறமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் -வி.சி.க

"சசிகலாவை அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்திருப்பது, அந்தக் கட்சியின் உள்விவகாரம். என்றாலும், சசிகலா தேர்வை நான் வரவேற்கவே செய்கிறேன். இதில் வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை" விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் உச்சமாக, முழுமையாக இன்னமும் 4 ஆண்டுகள் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி செய்யவுள்ளது. அதனை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில், ஜெயலலிதா இறப்பைத் தொடர்ந்தே, சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்ற தகவல் பரவலாக கசிய விடப்பட்டது. தற்போது, முதல்வராவதற்கான முயற்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேறத் தொடங்கி உள்ளன. தமிழக மக்களின் எதிர்காலம் என்னவாகும்? என்பதுதான், மக்கள் மற்றும் சாமான்ய அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரே கேள்வி. பொறுத்திருந்து பார்ப்போம்….
சி.வெங்கட சேது
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.