“தயாராக வாங்க…எம்.எல்.ஏக்கள் கூட்டமும் ,பதவியேற்பு திட்டமும்”!

Uncategorized

“தமிழக அரசியலில் அடுத்த வாரம் பல அதிரடி மாற்றங்கள் இருக்கலாம்” இந்த ஒற்றைவரி செய்தி தான்  அ.தி.மு.க நிர்வாகிகள் வாட்ஸ் அப்பில் இப்போது பரவுகிறது. குறிப்பாக ஆட்சியிலும், ஆட்சி செய்யும் அ.தி.மு.கவிலும் மாற்றங்கள் என்பது தான் இதன் உள்அர்த்தம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். 

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்  கடந்த புதன் கிழமையோடு நிறைவடைந்தது.கூட்டம் நடைபெற்ற காலத்தில் தான் கடந்த 27-ம் தேதி  அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நடத்தினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்களிடம் “ எந்த குறையாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள். உங்கள் தொகுதிக்கு வேண்டியதை அமைச்சர்களிடம் கேளுங்கள்” என்றெல்லாம் அட்வைஸ் செய்தார். இந்நிலையில்   மீண்டும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை சசிகலா நடத்த உள்ளார். ஓரே வாரத்தில் மீண்டும் எதற்காக கூட்டம் ?என்ற கேள்வி அ.தி.மு.க நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது. ஏற்கனவே சசிகலா ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24-க்கு முன் எந்த நேரத்திலும்  முதல்வர் பதவியை ஏற்கலாம் என்ற பேச்சு இருந்தது. இந்த நிலையில் அதிகாரத்தில் இருக்கும் சில முக்கிய அதிகாரிகளின் நடவடிக்கைகள் சசிகலாவிற்கு கொஞ்சம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசும் தமிழக அரசின் மீது நெருக்கடிகளை கொடுக்க இருப்பதாக  கார்டன் தரப்பு கருதுகிறது.

சசிகலாவின் கணவர் நடராஜன் “இனியும் காலதாமதம் செய்யாமல் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டுவிடு” என்று  மனைவியை வலியுறித்திவருகிறார். இதனால்  முதல்வர் பதவியை  பொறுமையாக ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்த சசிகலாவின் மனநிலையில் மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரமே முடிசூடுவதற்கு  நாள் குறிக்க சொல்லியுள்ளார். 12-ம் தேதி அன்று முதல்வர் பதவி ஏற்கலாம் என்ற பேச்சு இப்போது எழுந்துள்ளது. இதன் முன்னோட்டமாக தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை ஞாயற்றுகிழமை அன்று நடத்த முடிவாகியுள்ளது.அதோடு பதிமூன்று அமைச்சர்களும் மாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.  கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிலரையும்  மாற்றுவதற்கு லிஸ்ட் எடுத்துவருகிறார்கள்.தங்களுக்கு இணக்கமான அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டால் தான் பாதுகாப்பு என்ற மனநிலைக்கு வந்துள்ள கார்டன் வட்டாரம் அந்த பட்டியலையும் எடுத்து தயாரித்து வருகிறார்கள்.

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் “கூட்டத்திற்கு வரும் போது தயாராக எங்களை எடுத்துவர சொன்னது ' இது வரை தொகுதியில் மேற்கொள்ளபட்ட திட்டங்கள் குறித்த விவரங்களையும், தொகுதிக்கு பிராதான தேவை எது'  என்ற குறிப்புகளையும் கொண்டுவர சொல்லியுள்ளார்கள். ஆனால் இதை தாண்டி முக்கிய முடிவுகள் சிலவற்றை அந்த கூட்டத்தில் எடுக்க போகிறார்கள், அது தான் எங்களை ஆர்வம் அடையச்செய்துள்ளது” என்கிறார்கள் பூடகமாக. 

ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்  சசிகலா முதல்வர் பதவி குறித்து எதையும் பேசப்போவது இல்லை என்றும், ஆட்சி நிர்வாகம் பற்றி மட்டுமே பேசுவார். அதே நேரம் “நான் பதவியேற்றால் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” என்ற கோரிக்கையை சசிகலா சட்டமன்ற உறுப்பினர்களிடம் வைக்க உள்ளார் என்கிறார்கள் முக்கிய நிர்வாகிகள்.  

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால், தை மாதமே முடிசூட்டு விழாவை நடத்த மும்முரமாகிவிட்டார்கள் மன்னார்குடி உறவுகள். 

அ.சையது அபுதாஹிர். 

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top