எண்ணூர் முதல் பாலவாக்கம் வரை எண்ணெய்கழிவு… கடலை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்…?#SpotVisit
Uncategorized February 5, 2017,
நேற்றுவரை உலகின் இரண்டாவது மிக நீளமான அழகுக் கடற்கரை அது… ஆனால் நீலக்கடலில் இன்று கருமை நிறம் படர்ந்துள்ளது. ஆம், சென்னைக் கடற்கரையின் அழகை சிதைக்கும் விதமாக நடந்துள்ளது கப்பல் விபத்து. எண்ணூர் துறைமுகத்துக்கு அருகில் இரு கப்பல்கள் மோதிக் கொண்டதால், ஒரு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கசியத் தொடங்கியது. இதனால் சென்னைக் கடற்கரை முற்றாக கருமை நிறத்தில் காட்சி அளிக்கிறது. கொட்டிய எண்ணெயில் பெரும்பாலும் எண்ணூர் பகுதியை ஒட்டிய எர்ணாவூர் பகுதியில் தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்த முதல் நாளிலிருந்தே அப்பகுதி மக்கள் வாளியோடு கடலில் இறங்கி துாய்மைப்படுத்தத் துவங்கினர். இன்றுடன் 9 நாட்கள் முடிகிறது. இப்போது அப்பகுதி எப்படி உள்ளது?
மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் காவல்துறையின் தடியடிக்கு உள்ளான அதே மீனவர்களும், தன்னார்வலர்களும் அதே சமூக அக்கறையுடன் கச்சா எண்ணெயை அப்புறப்படுத்தும் பணியில் அதிகம் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு பெரும்பாலும் எந்த ஒரு பாதுகாப்பு கவசங்களும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் எண்ணெயின் வீரியம் தெரியாமல் அதிலேயே முழு நேரமும் இருந்து பணியாற்றுகின்றனர். அள்ள அள்ளக் குறையாமல் வடிந்த எண்ணெய், அலைகளில் மிதந்தன.
முதல்நாள் சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, இன்னும் இரண்டு நாட்களில் அதை சுத்தம் செய்துவிட முடியும் என்று கூறியிருந்தார். ஆனால் ஒன்பது நாளாகியும் இன்னும் எண்ணெய்யை கடலில் இருந்து அப்புறப்படுத்த முடியாத நிலை தான் நீடிக்கிறது. எர்ணாவூரை ஒட்டிய கடல்பகுதி இப்போதும் ஒரு கருங்கடலைப் போலத்தான் காட்சி அளிக்கிறது. படர்ந்திருந்த எண்ணெய்யின் நீள அளவு கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனால், அதன் அடர்த்தி குறைந்தபாடில்லை. கடலில் ஒரு பகுதி மட்டும் அல்லாமல், ஆங்காங்கே சிறுசிறு பகுதிகளாக எண்ணெய் பிரிந்துள்ளது. எண்ணெய் அள்ளுபவர்களும் குழுக்களாக பிரிந்து வேலை செய்கிறார்கள். தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் நான்கு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலானோர் சென்னை மற்றும், வேலூரிலிருந்து வந்திருந்தனர். கடலில் இருந்து எண்ணெய்க் கழிவுகளை வாளியில் அள்ளிக் கொடுக்க, அதை ஒருவருக்கு ஒருவர் மாற்றியபடி பாறைகளை தாண்டி வைக்கப்பட்டிருக்கும் சிண்டக்ஸ் டாங்குகளில் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், பாரத் பெட்ரோலியம் கம்பெனியில் இருந்து தன்னார்வலர்களும், ஊழியர்களும் சேர்ந்து எண்ணெய்யை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதில் பெண்களும் அடக்கம். காலையில் இருந்து மாலை வரை அங்கிருந்தபடியே வேலை பார்க்கிறார்கள். அவர்களிடம் பேசியபோது, “3 நாட்களாக இங்கு வேலை பார்க்கிறோம். முழு ஈடுபாட்டுடன் பணிபுரிகிறோம். விரைவில் கடலை சுத்தம் செய்துவிடுவோம்” என நம்பிக்கை தெரிவித்தனர்.
எண்ணூர் மட்டுமல்லாமல் மெரினா, திருவான்மியூர் மற்றும் பாலவாக்கம் வரையிலும் கழிவுகளின் தாக்கம் இருக்கிறது. மெரினா கடற்கரை எத்தனை சோதனைகளைத்தான் தாங்கிக் கொள்ளும்? வர்தா புயல் தொடங்கி, ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம், இப்போது இந்த கச்சா எண்ணெய்க் கழிவுகள்… இன்னும் எத்தனை பிரச்னைகளை அது பொறுத்துக் கொள்ளப் போகிறதோ தெரியவில்லை. நம்முடைய கவலைகளையும், மன அழுத்தத்தையும் ஒரு நொடியில் போக்கும் இயற்கை உருவாக்கிய அழகிய அலைகள். நம் கண் முன் சிதைவதை காண முடியவில்லை!
அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த மற்றொருவரிடம் பேசினோம். “
என் பேரு ஏழுமலை. நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்கிறேன். மொத்தம் 100 பேருக்கும் மேல 6 நாட்களா இங்க இருக்கோம். கழிவுகளை வாளியில எடுத்து கொட்டிட்டு இருக்கிறோம் எங்களால முடிஞ்ச வரை செய்றோம். ஆனா இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியல” என்றார்.
கழிவுகளின் விபரீதம் புரியாமல் மக்களும், தன்னார்வலர்களும், தீயணைப்புத் துறையினரும் அதை கைகளில் அள்ளிக் கொட்டுகிறார்கள். இவற்றை சரிசெய்ய தொழில்நுட்ப ரீதியான முறைகளை அரசாங்கம் மற்றும் கடற்படையினர் பயன்படுத்தாமல் வாளிகளை பயன்படுத்தி அள்ள முடியும் என்று எப்படி தீர்மானித்தார்கள்? இருந்தும் தொடங்கிவிட்டார்கள். விரைவில் இதை சீர்படுத்த முடியும் என்று நம்புவோம். சென்னையை அடுத்தடுத்த பிரச்னைகள் தாக்கியும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்த பிரச்னையும் கூடிய விரைவில் சென்னையை விட்டு விலகிச் செல்லும்… சென்னையே மிதந்தாலும், சென்னையில் மிதந்தாலும்…சென்னை மீளும் என நம்புவோம்.
– நந்தினி சுப்பிரமணி
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.