'தீபா அணியை நோக்கித் தள்ளுகிறாரா சசிகலா?!'   -புதிய பதவி கடுப்பில் அ.தி.மு.க சீனியர்கள் 

Uncategorized

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கோகுல இந்திரா உள்பட 23 பேருக்கு புதிய பொறுப்புகளை வழங்கியிருக்கிறார் சசிகலா. ' இப்படியொரு பதவியை வழங்காமலேயே இருந்திருக்கலாம். கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களுக்குப் பொதுச் செயலாளர் கொடுக்கும் மரியாதை இதுதானா?' எனக் கொந்தளிக்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 

அண்ணா தி.மு.க-வின் புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று வெளியிட்டார் பொதுச் செயலாளர் சசிகலா. இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 14 பேருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராக சிவபதியும் மீனவர் அணிச் செயலாளராக ஜெயக்குமாரும் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நயினார் நாகேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். " முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த நேரத்தில், ' அவருடைய விசுவாசிகள் யார் பக்கம் சேருவார்கள்' என்றுதான் மன்னார்குடி உறவுகள் கவலைப்பட்டனர். ' கட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை மத்திய அரசு பயன்படுத்த நினைக்கிறது. நீங்கள் எல்லாம் சசிகலா பின்னால் அணிவகுக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால்தான், கழகத்தைக் காப்பாற்ற முடியும்' என சமரசத்தில் ஈடுபட்டார் மன்னார்குடி உறவு ஒருவர். 'அம்மா வழிநடத்திய இரட்டை இலை சின்னம் முக்கியம்' என்பதால், சசிகலா பக்கம் வந்தோம். அவரும், ' கடந்தகாலத்தில் நடந்தவைகளைப் பற்றி நாம் நினைக்க வேண்டாம். உங்களுக்குத் தேவையானதை செய்வேன்' என உறுதி கொடுத்தார். இதையடுத்து, செங்கோட்டையன், ராஜகண்ணப்பன், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் சசிகலா தலைமையை ஏற்றனர். இந்நிலையில், நேற்று கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி உள்பட சில அணிகளுக்குப் புதிய நிர்வாகிகளை அறிவித்தார் சசிகலா. இந்தப் பட்டியலில் எங்களுக்கு உடன்பாடில்லை. தி.மு.கவில் இருந்துவிட்டு, அண்மையில் அ.தி.மு.கவில் இணைந்த கருப்பசாமி பாண்டியனுக்கும் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் செங்கோட்டையனும் ஒன்றா? சீனியர்களை அவமானப்படுத்தும் நோக்கிலேயே பதவிகள் வழங்கப்பட்டுள்ளன" எனக் கொதிக்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 

" கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனின் ஃபவர் பாலிடிக்ஸைக் குறைக்கும் நோக்கில் சசிகலாவுடன் அணி சேர்ந்தவர்கள்தான், இப்போதும் தீவிரமாக இயங்குகின்றனர். ஆட்சியில் இருக்கும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில அமைச்சர்களும் திட்டமிட்டே செங்கோட்டையனை ஒதுக்குகின்றனர். கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவருக்கிருக்கும் செல்வாக்கை சசிகலா நன்றாகவே அறிவார். அதனால்தான், பொதுக்குழு மேடையில் செங்கோட்டையனை முன்னிறுத்தினார். ஆனால், புதிய பதவி என்ற பெயரில், 25 பேரில் ஒருவராக செங்கோட்டையன் அமர்வதை அவருடைய ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை. கடந்த மூன்று தேர்தல்களிலும் இருக்கும் நிலங்களை விற்றுத்தான் தேர்தலை சந்தித்தார். இப்போதும் மீள முடியாத கடனில்தான் இருக்கிறார். பணத்துக்கு விலை போக நினைத்திருந்தால், மாற்றுக் கட்சிகளை நோக்கிச் சென்றிருக்க முடியும். அம்மா மீதான விசுவாசத்தில் இருந்து அவர் சிறிதளவும் மாறவில்லை. அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்திருந்தால், துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கியிருக்க வேண்டும். கட்சியின் தலைமைப் பதவிக்குள் மீண்டும் மீண்டும் மன்னார்குடி உறவுகளே கோலோச்சுவதைத்தான் சசிகலா விரும்புகிறார். வெளித்தோற்றத்தில், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் போன்று காட்சிகளை உருவாக்குகிறார். இதை நாங்கள் ஏற்கவில்லை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

" தீபாவுக்குக் கூடும் கூட்டத்தை அ.தி.மு.க நிர்வாகிகளே அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர். அண்ணா நினைவுநாளான நேற்று அவருடைய சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சசிகலா. அதேநேரம், தீபாவும் அஞ்சலி செலுத்த வந்தார். அவருக்குக் கூடும் கூட்டத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மாவட்டங்களில் கட்சி சார்பில் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த நிர்வாகிகள் சென்றபோது வந்த கூட்டத்தைவிட, தீபா அணியினர் நடத்திய கூட்டத்துக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். பத்து இடத்தில் எங்களுக்குக் கூடிய கூட்டம், நான்கே இடத்தில் தீபா அணிக்குக் கூடியுள்ளது. இதே நிலைமை நீடித்தால் அடுத்து வரக் கூடிய தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். தேர்தல் களத்தில் சசிகலாவை முன்னிறுத்தினால், மக்கள் மத்தியில் ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இப்போது புதிய பதவி என்ற பெயரில், கட்சியின் சீனியர்களை அவமானப்படுத்துகிறார் சசிகலா. இவர்களில் சிலர் தீபாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தால், அ.தி.மு.கவின் நிலைமை இன்னமும் சிக்கலாகிவிடும். நடராசன், திவாகரன் போன்றோரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பகிரங்கமாகவே பேசி வருகிறார். மற்ற சீனியர்களும் முனுசாமி வழியைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை, கார்டன் வட்டாரமே உருவாக்கிக் கொடுக்கிறது. சீனியர்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதை அறிந்தும், அவர்களை முன்னிறுத்துவதில் மன்னார்குடி உறவுகளுக்கு விருப்பம் இல்லை" என்கிறார் அதிருப்தியை  அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர். 

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் மே மாதம் நடக்க இருக்கின்றது. அதற்குள் ஆட்சி பிளஸ் கட்சியின் லகானைக் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும் வேலையில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார் சசிகலா. ' அதிருப்தியாளர்கள் ஒன்று சேருவது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதுதானா?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் கட்சியின் சீனியர்கள் சிலர். 

– ஆ.விஜயானந்த்
 

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top