'சுனாமியை விட இந்த டீசல் கசிவு மோசம்!" – சென்னை மீனவப் பெண்களின் கண்ணீர் #ChennaiOilSpill

Uncategorized

இது மீனவ நண்பர்களுக்கான கெட்டகாலமா… ? சென்னை 'நடுக்குப்பம்' மக்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியலையில் இருந்து அவர்கள் மீள்வதற்கு முன்னரே, எரிக்கின்ற நெருப்பில் கச்சா எண்ணெயை ஊற்றியிருக்கிறது மீனவ வாழ்வியலின் மேல்!

கடந்த 28-ம் தேதி எண்ணூர் துறைமுகத்தில் ஆரம்பித்து, சென்னை மெரினா வரை நீடித்து, இன்று எதுவரையில் என்று கூட கணிக்கமுடியாத அளவுக்கான கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டிருக்கிறது. ஒருபுறம் இந்த எண்ணெய்க் கசிவால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவு பற்றி பலதரப்பட்ட விவாதங்களும், விமர்சனங்களும் நடந்துகொண்டு இருக்க, மறுபுறம் அடுத்தடுத்தான எதிர்பாராத அசம்பாவிதத்தால், நிலைகுலைந்திருக்கிறது, மீனவர்களின் வாழ்வாதாரம்.

கடலில் இருந்து கொண்டு வரப்படும் மீன்கள் சாப்பிட்டால் ஆபத்து, மீன்களோடு கலக்கும் எண்ணெய் கசிவு போன்ற உறுதிப்படுத்தபடாத செய்திகளால், சென்னை மீன் விற்கும் சந்தைகள் முடங்கிக் கிடக்கின்றன. நாம் காசிமேடு மீன் சந்தைக்கு விசிட் அடித்தோம்

“40,000 ரூபாய் கடன் வாங்கி, அதுக்கு தினமும் 500 ரூபாய் வட்டி கட்டி வியாபாரம் பண்றேன். கடல்ல எண்ணெய் கொட்டியிருச்சுங்கிற தகவல் கிடைச்ச 28-ம் தேதியில இருந்து இங்க வியாபாரமே முடங்கிப் போச்சு. இதோ பாக்குறீங்கள்ல…எவ்ளோ கடைங்க காலியா இருக்கு" என்கிற காசிமேட்டைச் சேர்ந்த சற்குணாவின் பேச்சை தடை செய்கிறது அவருடைய இடைவிடா கண்ணீர்.

சென்னையைப் பொருத்தவரையில், மீன் வியாபாரச் சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான மீன்கள், ஆழ்கடலில் இருந்து எடுத்துவரப்படுபவை. வியாபாரத்துக்கு கொண்டுவரப்படும் மீன்கள் ஐந்து நாட்களுக்குள் விற்றுத் தீர்த்துவிட வேண்டும் இல்லையெனில் நஷ்டமே! ஏற்கெனவே, ஒரே சந்தைக் கடையில், பலர் வியாபாரம் செய்வதால், முன்புபோல் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை என கலங்கும் சின்னப் பொண்ணுவுக்கு, இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“ஆறு, ஏழு வருஷத்துக்கு  முன்னாடி, ஒரு நாளைக்கு 300, 400 ரூபாய் சம்பாதிச்சோம். ஆனா, இப்ப மீன் விக்கவே நிறைய பேர் வந்துட்டாங்க. இதுல இப்படி எதிர்பாராம நடக்குறதுகெல்லாம், நாங்க எப்படி பொறுப்பாக முடியும்? உழைச்சா சோறு… உழைக்கலைனா இல்லனு சொன்னாக்கூட பரவாயில்ல. நாங்க நேர்மையா உழைச்சும், எங்களுக்கு சம்பாத்தியம் இல்ல. எங்க வீட்டு குழந்தைககூட இந்த மீன் தான் சாப்பிட்டுது. நல்லாதான் இருக்காங்க?!” என்று நம்மிடம் கேள்விகளை எழுப்பும் சின்னப் பொண்ணுவுக்கான விடைகள் நம்மிடம் இல்லை என்பதை எதைக் கொண்டு தெரிவிக்க…

இந்த கச்சா எண்ணெய் கசிவால், கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து என்பது உண்மைதான். ஆனால், ஆழ்கடலுக்கு சென்று கொண்டுவரப்படும் மீன்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அடித்துச்சொல்கிறார், கடந்த 20 ஆண்டுகளாக மீன் விற்கும் தேவி.

''சாதாரணமாவே எண்ணெய் பிசுபிசுப்பு எப்படி இருக்கும்னு நமக்கு தெரியும்தானே? அப்படி இருக்கும்போது, நாங்கள் எப்படி எண்ணெய் கசிவால பாதிக்கப்பட்ட மீன்களை விற்கமுடியும்? இந்த டிவிகாரங்க திரும்பத் திரும்ப, இந்த விஷயத்தை போட்டுக்காட்டி, மக்கள் மனசுல பயத்தை உண்டாக்குறாங்க. சுனாமி வந்தப்போதுக்கூட நாங்க இப்படி அல்லல்படல”, என்கிற தேவியின் வார்த்தைகளில் உள்ள வலி கொடியதாக இருக்கிறது.

இதற்கான அடிப்படைக் காரணம், இதுபோன்ற அசம்பாவிதங்களை எதிர்கொள்ள, போதிய வசதி இல்லாமல் இருப்பதே! ஆரம்பம் முதலே, இந்த எண்ணெய் கசிவு குறித்த எந்த விளக்கமான விபரங்களையும் அரசாங்கம் வெளியிடவில்லை. இதனால், எது உண்மை, எது பொய் என்று ஆய்ந்து அறியும் நேரமும், பொறுப்பும் மக்களுக்கு ஏற்படாமல் ’நமக்கு எதுக்கு வம்பு?’ என்று, இந்த சம்பவங்களின் வீரியம் குறையும் வரை, கடல் சம்பந்தபட்ட பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறார்கள் மக்கள். ஆனால் அதையே வாழ்வாதாரமாக கொண்ட மீனவ பெண்களுக்கு தீர்வுதான் என்ன?

 

– ஷோபனா ரூபாக்குமார்

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top