'உம் பொண்ணால இன்ஃபெக்‌ஷன் ஆகிடும்.. தூக்கிட்டு போன்னுட்டாங்க!' – கலங்கித் துடிக்கும் நந்தினியின் தாய் #Justice4Nandhini

Uncategorized


 
'நான் ஏன் வீட்டுக்கு பாரமா இருக்கணும். தமிழரசனை கல்யாணம் பண்ணிட்டு வேலூருக்குப் போகப் போறேன். என்னை யாரும் தேடாதீங்க’ என தன் பெரியம்மா மகளுக்கு போனில் தகவலை சொல்லிவிட்டு காணாமல் போகிறார் நந்தினி.
அதுவரை பதட்டம் இல்லாமல் இருந்த நந்தினியின் அம்மாவும், சகோதரியும் பதறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, புகாரை மறுநாள் தான் பதிவு செய்கிறார்கள் காவல்துறையினர் . எந்த எண்ணில் இருந்து தங்கள் மகள் தங்களுக்கு போன் செய்தாரோ அந்த எண்ணையும் காவல்துறைக்கு கொடுத்து நடந்ததைச் சொல்ல, நந்தினி காணாமல் போனதை மட்டும் பதிவு செய்கிறது காவல்துறை. இந்த சம்பவம் நடந்தது டிசம்பர் 29-ம் தேதி. ஆனால் நந்தினியைப் பற்றிய விவரங்கள் அடுத்த 14 நாட்கள் கழித்தே தெரிய வருகிறது. அதுவும் எப்படி?

உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் கைகள் கட்டப்பட்டு உடல் பாகங்கள் ரணமாக்கப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாய் நிகழ்த்தப்பட்டிருக்கிறது ஒரு ஆணவக்கொலை. இத்தனை அரக்கத்தனத்தை கையில் எடுக்க எத்தனை துணிச்சலும், கொடூர குணமும் இருந்திருக்க வேண்டும்? இத்தனை காயங்களை உடம்பெங்கும் வாங்கிக் கொள்ள நந்தினி எவ்வளவு வலியைச் சுமந்திருக்க வேண்டும். வயிற்றில் கருவைச் சுமந்தப் பெண்ணை கொடூரமாக கொன்று குப்பையைப் போல் வீசி எறியும்  கொடூர குணம் படைத்தவர்களைத்தான் இச்சமூகம் உருவாக்கி கொண்டிருக்கிறதா? இறந்த நந்தினி எந்த சாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவரை அத்தனை வெறி கொண்டு கொல்லும் அளவுக்கு மனிதம் இங்கே செத்துப் போய்விட்டதா?

ஒரு தாய்க்குப் பிரசவம் நிகழ்வதென்பது அத்தனை சாதாரணமானது அல்ல. இயற்கை விதிகளுக்கு மாறாக பெண்ணின் பிறப்புறுப்பைக் கிழித்து, கருவில் இருக்கும் சிசுவைக் கொன்றிருக்கிறார்கள் என்றால் அந்த பெண்ணின் கதறல் விண்ணை கிழித்திருக்காதா? அதனால் தானோ என்னவோ வாயில் துணியை அடைத்து கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். நெஞ்சம் பதபதைக்கிறது ஒவ்வொரு முறை இச்செய்தியை படிக்கும்போதும். அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை நந்தினியின் தாய்.

‘ எம் புருசன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் செத்துப் போனார். எனக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன் . மொத பொண்ணுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இரண்டாவது பொண்ணு தான் நந்தினி. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். அந்த நேரத்துல தான் எங்க ஊர்ல ரோடு போடுற வேலை நடந்துச்சு. அந்த வேலைக்கு நந்தினியை அனுப்பி வச்சேன். அப்ப தான் அந்த பையன் கூட பழக்கம் ஏற்பட்டிருக்கு…நினைச்சுக் கூட பாக்கலை இப்படி அநியாயமா கொன்னுட்டாங்க’ பெற்ற மகளை இழந்த துக்கம் தாளாமல் கதறுகிறார் நந்தினியின் தாய் ராஜகிளி.

‘’ரோடு போடுற வேலை என்னவோ கொஞ்ச நாள் தான் இருந்துச்சு. அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேருக்கும் என்ன பழக்கம் இருந்துச்சுனு எங்களுக்கு தெரியாது.  பொண்ணுக்கு  16 வயசு தான் ஆகுது. சாவுறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தொண்டையில கட்டினு சொல்லி அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனோம். கட்டியை ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டு மருந்து கொடுத்து அனுப்பினாங்க. அப்ப கூட அவ கர்ப்பமா இருந்தது பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது. இறந்து போன பிறகு தான் இப்படி ஆச்சுனு தெரிஞ்சது. கடைசியா என் பொண்ணு முகத்தைக் கூட என்கிட்ட காட்டலை…’உம் பொண்ணால இன்ஃபெக்‌ஷன் ஆகிடும்.. தூக்கிட்டு போன்னுட்டாங்க. ஆஸ்பத்திரியில இருந்து அப்படியே சுடுகாட்டுக்கு கொண்டு போயிட்டோம்‘’ என்று ராஜகிளி பேசும்போது பகீர் என்கிறது.

ராஜகிளியை தேற்றிக் கொண்டே தன் உள்ளக்குமுறலைக் கொட்டித் தீர்க்கிறார் நந்தினியின் அக்கா சிவரஞ்சனி.

‘’எங்க அம்மா வயித்துப் பொழப்புக்காக முந்திரி தோப்புக்குப் போய் கொட்டை எடுக்குற வேலை செய்யறாங்க. தம்பியும் கறிக்கடையில கூலி வேலை பாக்குறான். நந்தினியும் படிக்க வழியில்லாம தான் வேலைக்கு போச்சு. காணாம போன அன்னைக்கு கூட பக்கத்துல வீட்ல டிவி பாக்குறானுதான் நினைச்சோம். ஆனா பெரியம்மா பொண்ணுக்கு ஒரு புது நம்பர்ல இருந்து போன் பண்ணி என்னை யாரும் தேட வேணாம். நான் தமிழரசன கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னா. ஆனா அதுவும் பொய்னு அப்புறம் தான் தெரிஞ்சது. அது தமிழரசன் இல்ல..மணிகண்டன்னு.  போலீஸ்ல அந்த புது நம்பரை கொடுத்தும் ரொம்ப நாள் கழிச்சுதான் தகவல் சொன்னாங்க. நாங்க சொன்ன தேதியிலயே கண்டுபிடிக்க ஆரம்பிச்சிருந்தா என் தங்கச்சி அநியாயமா செத்திருக்க மாட்டா. அவளை சின்னாபின்னமாக்கி கொன்னு கிணத்துல வீசியிருக்காங்க. கடைசியா முகத்தைக் கூட பாக்கலை. டிவியிலயும் போட்டோவுலயும் துணியில்லாத போட்டோவ காட்டுனப்ப அப்டியே துடிச்சுப் போயிட்டேன். நியாயம் கிடைக்காம பிணத்தை வாங்கிட்டு போக மாட்டோம்னு ஆஸ்பிட்டல்ல போராட்டம் பண்ணினோம். கடைசியில எதுவும் பண்ண முடியலை. இப்ப மணிகண்டனை ஜெயில்ல வச்சிருக்காங்க. சம்மந்தப்பட்ட மத்தவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கணும்.’’ என்கிறார் வலிகளை வார்த்தைகளில் அடக்கிக் கொண்டு.

நந்தினிக்கு ஏற்பட்ட கொடூரம் சமூகத்தின் கறை.
நியாயம் வெல்லட்டும்!

 

– பொன்.விமலா

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top