இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்..! முதல்வரை சாடும் ராமதாஸ்

Uncategorized

''இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் பணிகளை முதல்வர் தடுக்க வேண்டும்" என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆற்று நீர் பகிர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வரும் ஆந்திர அரசு, அடுத்தக்கட்டமாக பாலாற்று துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தல், புதிய தடுப்பணைகளை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அவற்றை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் உருவாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டில் பாயும் பாலாறு வட தமிழ்நாட்டின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கியது. ஆனால்,  ஆந்திரத்தில் மொத்தம் 33 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே மொத்தம் 22 தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியதால் தமிழ்நாட்டுக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் ஒருகாலத்தில் பால் போன்று தண்ணீர் ஓடும் ஆறாக இருந்த பாலாறு பாலைவனமாக மாறிவிட்டது. ஆந்திரத்தில் தொடர்ந்து மழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் தான் தடுப்பணைகளையெல்லாம் மீறி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரும் என்ற நிலை ஏற்பட்டது. 

பாலாற்று நீர் தமிழகத்துக்கு வருவது பெருமளவில் தடுக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளை ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது. பாலாற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றான சின்ன எரு என்ற ஆறு 16 கி.மீ தொலைவுக்கு காட்டு வழியே பாய்ந்து தமிழக எல்லையான புல்லூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் பாலாற்றில் கலக்கிறது.  இந்த ஆற்றில் 16 கி.மீ தொலைவில் 12 தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றில் கடைசியாக தமிழக எல்லை அருகில் சோமபள்ளம் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரம் 5 அடியிலிருந்து 8 அடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.  சின்னஎரு ஆற்றின் குறுக்கே உள்ள மேலும் 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவும், பாலாற்றின் குறுக்கே 2 புதிய தடுப்பணைகளை கட்டவும் ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் பாலாற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வருவது கனவாகி விடும். பாலாற்றில் ஏற்கெனவே தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும் போதிலும், கடுமையான மழைக்காலங்களில் மட்டும் ஓரளவு நீர் தடுப்பணைகளை மீறி தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தது. இதற்கு காரணம் பாலாற்றின் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகளின் உயரம் குறைவாக இருந்தது தான். ஆனால், இப்போது தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படுவதுடன் புதிய தடுப்பணைகளும் கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்காது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது.

பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகளை கட்டுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணமாகும். இப்போதும் கூட தடுப்பணைகள் பணி நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கோரும் வழக்கமான பணியையே மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை முடிவதற்குள் தடுப்பணைகள் கட்டும் பணிகளும் முடிவடைந்து விடும். எனவே, இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளையும், உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் முதல்வர்  தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top