' ஆவணங்களைக் கொடுங்கள்'   -சசிகலாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம் 

Uncategorized

' தமிழக முதல்வர் நாற்காலியை நோக்கி சசிகலா நகர்ந்து கொண்டிருக்கிறார்' என வட இந்திய ஊடகங்கள் வரையில், விவாதங்களைத் தொடங்கியுள்ள சூழலில், ' அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் தேர்வு குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சசிகலாவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடவே, ' இரட்டை இலை சின்னத்துக்கு யாராவது உரிமை கொண்டாடினால், ஏற்கக் கூடாது' எனவும் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் சசிகலா எதிர்ப்பு அணியினர்.

சென்னை, வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் நிர்வாகிகளால் முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. தற்காலிக பொதுச் செயலாளராக பதவியேற்றவர், ' பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் நிரந்தர பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும்' என தேர்தல் ஆணையத்தை அணுகினர் அ.தி.மு.க நிர்வாகிகள். ஆணையத்தின் கெடுபிடியால், கார்டன் முயற்சிகள் எதுவும் ஈடேறவில்லை. ' அ.தி.மு.கவை உருவாக்கிய எம்.ஜி.ஆர், கட்சிக்கென சில விதிகளை வகுத்திருக்கிறார். அதன்படி ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாதவர்கள், பொதுச் செயலாளர் ஆக முடியாது. 2011-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா. வரும் மார்ச் மாதத்துடன்தான் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. கட்சி உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டுத்தான் பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்ய முடியும். சசிகலாவை சட்டவிரோதமாக தேர்வு செய்துள்ளனர்' என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா. கடந்த வாரம், இதுதொடர்பான விசாரணையிலும் ஆஜராகிவிட்டு வந்தார். இந்நிலையில், ' பொதுச் செயலாளர் தேர்வு குறித்த ஆவணங்களை சமர்ப்பியுங்கள்' என சசிகலாவுக்கு உத்தரவிட்டுள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். 

" அ.தி.மு.கவின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிக்கு மட்டுமே, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரும் தகுதி இருக்கிறது. வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் ஆஜரான சசிகலா புஷ்பா, ' மகாராஷ்ட்ராவில் நடக்க உள்ள தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை சசிகலா பரிந்துரை செய்தால், ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. சின்னத்துக்கு உரிமை கோருவது கிரிமினல் குற்றமாக கருதப்பட வேண்டும். ஏனென்றால், கட்சி விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டவராக சசிகலா இல்லை. 1996-ம் ஆண்டு திருநாவுக்கரசருக்கு எதிராக அ.தி.மு.க தொடர்ந்த வழக்கிலும், ' கட்சி உறுப்பினர்களால் முறைப்படி திருநாவுக்கரசர் தேர்வு செய்யப்படவில்லை' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு சசிகலாவுக்கும் பொருந்தும். கட்சி விதி 20(2), 40(3) ஆகியவற்றின் அடிப்படையில் சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. எனவே, முறையாக தேர்தலை அறிவித்து, வேட்புமனுத் தாக்கல் செய்து சசிகலா போட்டியிட வேண்டும்' என ஆணையத்தில் தெரிவித்தார். இதையொட்டியே, சசிகலாவிடம் ஆவணங்களைக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் உள்பட தமிழ்நாட்டில் வரப் போகும் எந்தத் தேர்தலிலும், இரட்டை இலை சின்னத்தைக் கோர வேண்டும் என்றால், முறைப்படி தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளர் கட்சியில் இருக்க வேண்டும். இரட்டை இலைக்குப் பரிந்துரை கடிதம் கொடுக்கும் தகுதி சசிகலாவுக்கு இல்லை" என அதிர வைக்கின்றனர் சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள். 

" அ.தி.மு.க சார்பில் ஆணையத்தை அணுகிய நிர்வாகிகள், ' சமாஜ்வாதி கட்சிக்குள் தந்தை-மகனுக்கு இடையே தகராறு வெடித்தபோது, விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது ஆணையம். அதைப்போலவே, ' அ.தி.மு.க நிர்வாகிகள் ஒன்றுகூடி தேர்வு செய்த சசிகலாவையும் ஏற்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இந்த சமரசத்துக்கு ஆணையத்தின் அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை. திருநாவுக்கரசர் வழக்கில் அ.தி.மு.க தரப்பில் இருந்து என்ன நியாயங்கள் சொல்லப்பட்டதோ, அவை அனைத்தும் சசிகலாவுக்கும் பொருந்துகிறது. ' ஐந்தாண்டுகள் கட்சியின் உறுப்பினராக இல்லாதவர், கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகிப்பதே சட்ட விரோதம்தான்' என நீதிமன்றத்துக்கு வழக்கை எடுத்துச் செல்லும் முடிவிலும் சசிகலா எதிர்ப்பாளர்கள் உள்ளனர். முறைப்படி தேர்தல் நடத்தினால், மாவட்டம்தோறும் அட்டைப் பெட்டிகளை வைத்து, அ.தி.மு.க உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அனைவரும் சசிகலாவுக்கு வாக்களிப்பார்களா என்பது மிக முக்கியமான கேள்வி. அதனால்தான், தேர்தல் ஆணையத்தை சரிகட்டும் வேலையில் கட்சியின் டெல்லி சீனியர்கள் களமிறங்கினர். அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. டெல்லி லாபியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்" என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

தேர்தல் ஆணையத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் சசிகலா? 

– ஆ.விஜயானந்த்
 

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top