"அது சும்மா கொஞ்சமாதான் சிதறியிருக்கு!” – சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் பகீர்
Uncategorized February 4, 2017,
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே வங்கக்கடலில் டான் காஞசிபுரம் கப்பல் மீது மேப்பல் நிறுவனக் கப்பல் மோதியதில் கப்பலின் நடுப்பகுதி சேதமடைந்து கப்பலின் இஞ்ஜினை இயக்க உபயோகப்படுத்தப்படும் கனரக எண்ணெய், கடலில் கசிந்து பரவியது. இதையடுத்து, எண்ணூரை அடுத்துள்ள எர்ணாவூர் தொடங்கி காசிமேடு வரை உள்ள கடற்கரையோரப் பகுதிகளில் எண்ணெய்க் கழிவுகள் ஒதுங்கின. இந்த எண்ணெய்க் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி முதலில் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இயந்திரங்கள் மூலம் மிகவும் குறைந்த அளவிலேயே அப்புறப்படுத்த முடிகிறது என்பதால், மனிதர்களைக் கொண்டு எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோரக் காவற்படை ஈடுபட்டது. கடலோர மீனவர்கள் மற்றும் சென்னை, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், தன்னார்வலர்களும் அரசு அழைக்காமலேயே எண்ணெய்க் கழிவை அகற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
கழிவு எண்ணெயைக் கைகளால் அள்ளி எடுப்பது ஆபத்தானது என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்களில் கழிவுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எட்டு நாட்கள் கடந்தும் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்படாமல் அள்ள அள்ளக் குறையாமல் வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைக்கு இந்தக் கழிவுகளை அகற்ற போதிய தொழில்நுட்ப வசதிகள், மத்திய-மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களிடம் இல்லையென்றாலும் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் துறைமுகங்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
கப்பல் மோதி விபத்துக்குள்ளாகி எண்ணெய் கசிவு ஏற்பட்டு எட்டு நாட்களான பின்னர் நேற்றுதான், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணனும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் எண்ணூர் துறைமுகப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
அப்போது, விபத்து காரணமாக கடலில் ஏற்பட்ட வீரியம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், "அது சும்மா…கொஞ்சமாத்தான் சிதறியிருக்கு, பெரிய வகையில் ஆபத்து எதுவும் இல்லை. மேலும் மக்களுக்கான இழப்பீடு ஏதேனும் வழங்கப்படுமா என்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார். டன் கணக்கில் எண்ணெய்க் கழிவுகள் வெளியேறியுள்ளதாக துறைமுகத் தரப்பில் இருந்தே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சரின் இந்த பதில், 'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க' என்னும் கூற்றைத்தான் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
-ஐஷ்வர்யா
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.