ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.7.62 லட்சம் 'செல்லாக்காசு'

Uncategorized

திருச்சி : ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியலில், கடந்த ஒரு மாதத்தில் 7 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செல்லாத நோட்டுகள் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள 40 நிரந்தர உண்டியல்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசிக்காக வைக்கப்பட்ட 3 தற்காலிக உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் எண்ணப்பட்டன. தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த உண்டியல்களில் மொத்தம் 93 லட்சத்து 58 ஆயிரத்து 511 ரூபாய் ரொக்கமும், 102 சவரன் தங்கம், 3கிலோ 725 கிராம் வெள்ளி, 495 டாலர் வெளிநாட்டு கரன்ஸி ஆகியவை இருந்தன.  உண்டியலில் போடப்பட்ட ரூ.93.59 லட்சத்தில் ரூ.7.62 லட்சம் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகள் ஆகும். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மாற்றும் காலம் முடிவடைந்த நிலையில், ரூ.7.62 லட்சம் செல்லாத பணம் கோயில் உண்டியலில் போடப்பட்டது பரபரப்பை எற்படுத்தியது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தோம். "மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 7.62 லட்சம் ரூபாய் மதிப்பில் உண்டியலில் இருந்தது. தற்போது வெளிநாட்டினரிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி, இந்த ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொள்ளப்படும். தனிப்பட்ட முறையில் என்றால்தான் மாற்ற முடியாது. கோயில் நிர்வாகம் என்ற முறையில் இதை மாற்றுவதில் சிக்கல் இருக்காது.

மொத்தமுள்ள 7.62 லட்சமும் ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து, இதற்கான காரணத்தையும் தெரிவித்து கொடுத்தால்,  கோயில் நிர்வாகத்தின் பெயரில் டிடி அல்லது காசோலையாக ரிசர்வ் வங்கி அளிக்கும். எனவே, ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதில் சிரமம் இல்லை," என்றனர்.

– சி.ய.ஆனந்தகுமார்

Source: ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.7.62 லட்சம் 'செல்லாக்காசு' – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top