ரியல் எஸ்டேட் கோல்ட் வார்… அரசின் இரட்டைவேடமும் அலைக்கழிக்கப்படும் பொதுமக்களும்!

Uncategorized

ரியல் எஸ்டேட் தொழிலின் இரண்டு பிரிவினருக்கிடையேயான தொழிற்போட்டி, வாயையும் வயிற்றையும் கட்டி சிறுகசிறுகச் சேர்த்த பணத்தில் சொத்துக்களை வாங்கிப்போட்ட லட்சக்கணக்கான நடுத்தர மக்களைப் பரிதவிக்க விட்டுள்ளது.

2000 வரை தமிழகத்தில், ரியல் எஸ்டேட் தொழில் முறையான தொழிலாக அங்கீகாரம் அளிக்கப்பட்டு நடந்துவந்தது. அதன்பின்னர், மக்கள்தொகைப் பெருக்கமும் உறைவிடத் தேவையும் இந்தத் தொழிலுக்குத் திடீர் வெளிச்சத்தைப் பாய்ச்சின. இதனால் புற்றீசல்கள்போல ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் உருவானார்கள்.  மனைகளின் தேவைகள் அதிகரித்தநிலையில் இம்மாதிரியான தொழிலதிபர்கள் முறையற்ற வகையில் மனைகளை உருவாக்கி மக்களை ஏமாற்றுவது நடந்தது. விவசாய நிலங்கள், பல இடங்களில் அடிமாடு விலைக்கு விவசாயிகளை மிரட்டி வாங்கப்பட்டு… அதிகாரிகளின் துணையோடு அவை மனைகளாக்கப்பட்டன. இது ஒருபுறமிருக்க… அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளும் இவ்வாறாக மக்களிடம் விற்கப்பட்டன. ‘சென்னைக்கு மிக அருகில் வசிக்கலாம்’ என தொலைக்காட்சிகளில் கூவிக்கூவி பிரபலங்கள் சொன்னதை நம்பி அப்படி வாங்கிப்போட்டவர்கள் இன்று, அவை அங்கீகரிக்கப்படாததால்… தலையில் கைவைத்துக்கொண்டு உள்ளனர். 

பல மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் அதிபர்களின் ஆசை வார்த்தைக்கு பலியான உயர் அதிகாரிகள், விவசாய நிலங்கள் காணாமல்போகக் காரணமானார்கள். விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க வேண்டுமானால்… அதில், குறிப்பிட்ட காலம்வரை எதுவும் பயிர் செய்யப்படவில்லை என்றும் அது விளைச்சலுக்கு ஏற்றதல்ல என்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான அதிகாரிகள்தான் ‘நோ அப்ஜெக்‌ஷன்’ சான்றிதழ் தரவேண்டும். நிஜமான சான்றுகளுடன் பல மாதங்கள் அலைந்து திரிய வேண்டியதிருக்கும் இந்த விவகாரத்தில், அதிகாரிகள் விலைபோன காரணத்தால்… ரியல் எஸ்டேட் அதிபர்கள் காரில் அமர்ந்திருக்க, அவர்களது ஊழியர்கள் ஆட்சியர் அறைக்குச் சென்று சான்றிதழ் வாங்கும் அளவு, எல்லை மீறிப்போனது. பல இடங்களில் விளைநிலங்களைத் தங்களுக்கு விலைக்குக் கொடுத்துவிடும்படி விவசாயிகள் மிரட்டப்பட்டதும் நடந்தேறின. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநிலத் தலைமையுடன் நெருங்கியத் தொடர்புகொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி காலத்தில், இப்படி விளைநிலங்கள் நிறையப் பறிபோனதாக அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடிபிடித்தன. இதேபோன்று பல மாவட்டங்களில் அதிகாரிகளின் துணையுடன் விவசாய நிலங்கள் ஸ்வாகா செய்யப்பட்டன. இந்த நிலையில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகப் பத்திரப்பதிவு செய்யத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகப் பத்திரப்பதிவு செய்வதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை பிறப்பித்தது நீதிமன்றம். இது, ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் வியாபாரத்துக்குப் பெரும் முட்டுக்கட்டை ஆனது. இதனால், இந்தத் தடையை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றனர். ‘இந்த தடையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர்’ என்பதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள், ‘‘விளைநிலங்களை வீட்டு மனைகளாக அங்கீகரிக்கும்படியான குடிநீர் வசதி மின்வசதி உள்ளிட்ட பலவற்றை உள்ளாட்சியும் நேரடியாக அரசும் சேர்ந்து உருவாக்கித் தந்துவிட்டு… இப்போது, அதை மனைகளாகப் பதிவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது இரட்டைவேஷம்’’ என்பதுபோலக் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், தடையை நீக்கவில்லை நீதிமன்றம். 

அரசின் பதிலுரைகளில் திருப்தியடையாத நீதிமன்றம், விசாரணையின்போது… ‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தலைமைச் செயலாளர் தலைமையில் அரசு உருவாக்க வேண்டும்’ என அறிவுறுத்தியது. தொடர்ந்த பல விசாரணை நிலைகளைத் தாண்டி இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துக்குமாரசாமி, ‘‘வேலைபளு அதிகம் உள்ளதால், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க தலைமைச் செயலாளருக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை’’ என்றார்.

அப்போது ரியல் எஸ்டேட் தரப்பில், ‘‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையினால், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் கட்டப்பட்ட வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கான பாதிப்பு. எனவே, இம்மாதிரி மனைகளில் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. 

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த நீதிபதிகள், ‘‘சட்டத்தைப் பின்பற்றி வீட்டு மனைகளை உருவாக்கியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தடை உத்தரவினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை என்றாலும் அதற்காக விலக்கு அளித்தால், மீண்டும் பழைய நிலை திரும்பிவிடும். எனவே, இப்போது வீடுகளுக்கு மட்டும் விலக்கு அளிப்பது என்பது முடியாத காரியம். இதனால் முன்பு சொன்னபடி வழக்கின் அனைத்து அம்சங்களுக்கும் தீர்வு உருவாகும்படி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் ஒருங்கிணைந்த திட்டத்தை அரசு விரைவில் உருவாக்கட்டும்’’ என்றனர். இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

இதுதொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் இளங்கோவனிடம் பேசினோம். ‘‘சி.எம்.டி.ஏ அனுமதி பெற்ற மனைகளை விற்கும் அதிபர்கள் சங்கம்தான், தொழிற்போட்டியினால் இப்படியொரு வழக்கைத் தொடுத்தனர். உண்மையில் தனது மனுவில், ‘அங்கீகரிக்கப்படாத மனைகளை இனிவரும் காலங்களில் பதிவுசெய்யத் தடை விதிக்க வேண்டும்’ என்றுதான் கோரியிருந்தார் ‘யானை’ ராஜேந்திரன். அதன்படி, தீர்ப்பு வெளியான கடந்த செப்டம்பர் 10-ம் தேதியிலிருந்துதான் இந்தத் தடை அமலுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால், கடந்த காலத்துக்கும் இதைப் பொருத்தி நீதிமன்றம் தடை விதித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

ரியல் எஸ்டேட், மக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு விரிவாக்கம் ஆன தொழில். அரசு, நகரங்களுக்கு டி.டி.சி.பி என்றும், மாநகராட்சிகளுக்கு சி.எம்.டி.ஏ மற்றும் எம்.எம்.டி.ஏ என்று அங்கீகாரங்களை வழங்குகிறது. ஆனால், கிராமப் பகுதிகளுக்கு அப்படி எந்த அங்கீகாரமும் இதுவரை கிடையாது. கிராமப்புறங்களில் பூர்வீக சொத்துக்களை சகோதரர்களே தங்களுக்குள் பிரித்துக்கொண்டு எந்த அனுமதியும் இன்றி வீடு கட்டிக்கொள்வர். இதுதான் இன்றுவரை நடைமுறை. 

‘அங்கீகாரம் இல்லாத மனைகள்’ என இன்று அரசு சொல்வது திடீரென ஆகாயத்தில் இருந்த குதித்தவை அல்ல. இந்த மனை உருவாக்கத்தில் மத்திய அரசும் மாநில அரசின் 9 துறைகளும் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. விளைநிலங்களை விற்கும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம், ‘போதிய மகசூல் இல்லாததாலும் இனி அதற்கு வாய்ப்பு இல்லாததாலும் பிழைப்புக்காக இதை விற்கிறேன்’ என கடிதம் மூலம் தெரிவித்ததற்குப் பிறகே…  ஆய்வுகளுக்குப் பின்னர், அதற்கு மாவட்ட நிர்வாகம் ‘நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் தருகிறது. அதன்பேரில் உருவாகும் மனைப் பிரிவுக்குப் பத்திரப்பதிவுத் துறையின் ஐ.ஏ.எஸ் நிலையிலான ஓர் அதிகாரிதான் ஒப்புதல் தருகிறார். அந்தப் பதிவின்போது மனை மதிப்பீட்டில் 8 சதவிகிதம் ஸ்டாம்ப் டூட்டியாகச் செலுத்துகிறோம். இதில், மாநில அரசுக்கு 5 சதவிகிதமும் மத்திய அரசுக்கு 3 சதவிகிதமும் போய்ச் சேர்கின்றன. அதேசமயம், இந்த விற்பனை முறையாக நடைபெறுவதால்… வருமானவரித் துறைக்கும் நாங்கள் வரி செலுத்துகிறோம். 

இந்த மனைகளுக்கான திட்ட அனுமதியை உள்ளாட்சித் துறை வழங்குகிறது; அதற்கு, மாநில அரசின் வருவாய்த் துறை பட்டா வழங்குகிறது; தொடர்ந்து மின்வாரியம், மின்வசதியையும்… நகராட்சி, சாலை வசதியையும்… ஏற்படுத்தித் தருகிறது. குடிநீர் வசதியையும் மாநில அரசுதான் வழங்குகிறது. இப்படி ஒரு மனைப்பிரிவு உருவாக்கத்தில் மாநில அரசின் 9 துறைகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தடைக் காலத்துக்கு முன்புவரை இந்த மனைகளுக்கு எல்.ஐ.சி மற்றும் சில பொதுத்துறை வங்கிகள் கடனுதவி அளித்துவந்தன. முறையான அனைத்து சட்டப்பூர்வ நியதிகளையும் நிறைவுசெய்து நடக்கும் பரிவர்த்தனையை இன்று சட்டவிரோதமான செயல் போன்று நிறுவ முயற்சிக்கிறார்கள். நீதிமன்றம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை.  இதே நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் இரண்டு சகோதரர்களுக்கிடையிலான சொத்துப் பிரச்னையில் அண்ணனுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அந்த வழக்கின் சொத்து என்பது அங்கீகாரமில்லாத மனைதான். ஏன் இந்த முரண்?

அதேசமயம், சில இடங்களில் விளைநிலங்கள் அதிகாரிகள் துணையோடு வீட்டு மனைகளாக்கப்படுகின்றன. அதிகாரிகள் துணை போகவில்லை என்றால் அதற்கு வழியே இல்லையே? விளைநிலங்கள், வீட்டுமனைகளாவதைத் தடுக்கும் நிஜமான அக்கறையும், அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளைத் தடுப்பதும் மாநில அரசின் நோக்கம் என்றால் அதற்குச் சட்டப்பூர்வமாக உதவிகளைச் செய்தது ஏன்? இப்படி அரசின் இரட்டைவேஷத்தால் பொதுமக்கள்தான் இன்று பரிதவிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த மனைகளை வாங்கியவர்கள் யாரும் கோடீஸ்வரர்கள் அல்ல; மத்திய தர மற்றும் அதற்குக் கீழுள்ள வர்க்கத்தினர். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகத் சிறுகசிறுகச் சேமித்து மனைகளை வாங்கிப்போட்டவர்கள், இன்று அவர்களின் படிப்பு, மருத்துவச் செலவு, திருமணம் என எந்த அவசரத் தேவைகளுக்காகவும் விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இப்படி லட்சக்கணக்கான பேரை கலங்க வைத்திருக்கிறது நீதிமன்றம். ‘யானை’ ராஜேந்திரனின் மனுவில் கேட்டபடி, 10-9-2016-க்குப் பிறகு இது நடைமுறைக்கு வரட்டும். பொதுமக்களின் மீது கருணை காட்டி அதற்கு முன்பு வாங்கியவைகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலில் அரசு உருவாக்கும் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரையரை செய்யும் குழு இவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு விதிமுறைகளை வகுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இம்மாதிரி சிக்கல்கள் உருவாகாது” என்றார். 

– எஸ்.கிருபாகரன்

Source: ரியல் எஸ்டேட் கோல்ட் வார்… அரசின் இரட்டைவேடமும் அலைக்கழிக்கப்படும் பொதுமக்களும்! – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top