பட்ஜெட்டில் மீனவர்கள் நலன் புறக்கணிப்பு… தமிழக மீனவர்கள் அதிருப்தி !

Uncategorized

ராமேஸ்வரம் : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்,ப் மீனவர் நலன்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு – புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறியதாவது.

‘‘மீனவர்கள் மீதும் அவர்களின் நலன்களின் மீதும் அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி, தொடர்ந்து மீனவர்களின் நலனைப் புறக்கணித்து  வருகிறது. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மீனவ மக்களின் நலன்களைக் காக்கும் எந்த அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இந்தியா முழுவதும் உள்ள 9 கடலோர மாநிலங்களில் வசிக்கும் சுமார் 2 கோடி மீனவர்களைப் பாதுகாப்பதற்கோ, புதிய மீன்பிடித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கோ இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.  ஆண்டுதோறும் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணி ஈட்டித்தரும் மீனவர்களை, மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

ஏற்கெனவே, மத்திய அரசு கொடுத்துவந்த டீசல் மானியத்தையும் நிறுத்திவிட்டது. நிறுத்தப்பட்ட டீசல் மானியம் குறித்தோ, ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்தும் புதிய திட்டங்கள் குறித்தோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆழ்கடல் மீன்பிடிப்பு முறைக்கு எங்களை மாறச்சொல்லும் மத்திய அரசு, அதற்கான நிதிஉதவி மற்றும் மானியம் குறித்து இந்த பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை.

தேர்தல் நேரத்தில், மீனவர்களுக்கு என தனி இலாகா உருவாக்கப்படும் எனச்சொன்ன மத்திய அரசு, கடந்த 3 ஆண்டுகளாக அதனை செயல்படுத்தவில்லை. இதனால், எங்களின் தேவைகளை மத்தியில் எடுத்துச் சொல்ல வாய்ப்பும் இல்லை.  ஒட்டு மொத்தத்தில் மீனவர்களை ஏமாற்றுகிற பட்ஜெட்டாகவே இந்த மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது’’என்றார்.

– இரா.மோகன்.

Source: பட்ஜெட்டில் மீனவர்கள் நலன் புறக்கணிப்பு… தமிழக மீனவர்கள் அதிருப்தி ! – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top