'பட்ஜெட்டில் மீனவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை'
Uncategorized February 2, 2017,
நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 'மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கென்று எந்த திட்டமும் இல்லாததைக் கண்டித்து' அறிக்கை வெளியிட்டுள்ளார் அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கத்தின் தலைவர் சே.சின்னத்தம்பி.
அவரது அறிக்கையில், 'இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் மீனவர்களுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்காதது மீனவர்களை ஏமாற்றம் அடையவைத்துள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட்டில் மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதை மீனவர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மீனவர்களுக்கு தனி அமைச்சரகம், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களைக் கூறி பா.ஜ.க தேர்தலில் பிரசாரம் செய்தது. ஆனால் கடந்தகால பட்ஜெட்டில் அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கை கடற்படை பிரச்னை, டீசல் விலையேற்றம், மீன்களுக்கு முறையான விலை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் மீன்பிடி தொழில் நசிந்து மீனவர்கள் அழிவின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்தியாவில் 13 கோடி மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்துகொண்டு இருக்கும் சூழ்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு குறைந்தபட்சம் மீனவர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாதது மீனவர்களை ஏமாற்றும் செயல். இந்த நிதிநிலை அறிக்கையிலும் மத்திய அரசு மீனவர்களுக்கு எந்த திட்டம் அறிவிக்காதது குறித்து மீனவர்கள் சார்பில் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.' என்று குறிப்பிட்டுள்ளார் சே.சின்னத்தம்பி.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.