துரைமுருகனுக்கு 'கல்தா' கொடுத்த சபாநாயகர்!

Uncategorized

சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக்குழுத் தலைவர் பொறுப்பு தனக்கு வேண்டாம், அந்தப் பொறுப்பை துரைமுருகனுக்குத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ள சபாநாயர், பொதுக் கணக்குக்குழுத் தலைவராக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமியை நியமித்துள்ளார்.

சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக்குழுத் தலைவர் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படுவது மரபு. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் பொதுக் கணக்குக்குழுத் தலைவர் பதவி நியமிக்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, நடந்துவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், பொதுக் கணக்குக்குழுத் தலைவர் பதவி நிரப்பப்படும் என்று சபாநாயகர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இதனிடையே, தனக்கு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக்குழுத் தலைவர் பொறுப்பு வேண்டாம் என்றும், அதைத்  துரைமுருகனுக்குத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக்குழுத் தலைவராக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமியை நியமித்துள்ளார் சபாநாயகர் தனபால். இதற்கு, திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து துரைமுருகன் கூறுகையில், குழுத் தலைவர் பதவி தராததால் எந்தக் குழுவிலும் திமுக எம்எல்ஏக்கள் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Source: துரைமுருகனுக்கு 'கல்தா' கொடுத்த சபாநாயகர்! – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top