' துரைமுருகனுக்குப் பதவியை மறுத்தது ஏன்?'  -ஊழல் ரகசியத்தைச் சொல்லும் தி.மு.க எம்.எல்.ஏ. 

Uncategorized

சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமியை நியமித்ததை எதிர்த்து, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது தி.மு.க. ' சபையின் மரபுகளைக் காற்றில் பறக்கவிடும் விதமாகவே ஆளும்கட்சி செயல்பட்டுவருகிறது. அவர்களுடைய ஊழல் விவகாரங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்' எனக் கொந்தளிக்கிறது தி.மு.க. 

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர், கடந்த 23-ம் தேதியில் இருந்து நடந்துவருகிறது. 'சட்டமன்றத்தின் 14 குழுக்களிலும் உறுப்பினர்களை நியமனம்செய்ய வேண்டும்' என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் மனு கொடுத்தார், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆளுநர் வித்யாசாகர் ராவிடமும் மனு கொடுத்தார். அரசிடம் இருந்து உறுதியான பதில் வராததால், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் ஸ்டாலின். இந்த வழக்கில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, ' 12 குழுக்களில் அலுவல் ஆய்வுக் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின்மூலம் நான்கு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. எஞ்சிய சட்டமன்றக் குழுக்கள் படிப்படியாக அமைக்கப்படும்' என விளக்கம் அளித்தார். இதனை ஏற்ற உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஏற்கவில்லை. அரசின் முடிவை எதிர்த்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

திருவிடைமருதூர் தி.மு.க எம்.எல்.ஏ கோவி.செழியனிடம் பேசினோம். " பொதுக் கணக்குக் குழுத் தலைவராக எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டும். அதனை மீறி, காங்கிரஸ் கட்சியின் கே.ஆர்.ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நாங்கள் ஆடிட்டிங் செய்ய ஆரம்பித்தால், அ.தி.மு.க அரசின் கணக்கு வழக்குகளைத்தான் தோண்டி எடுக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க அரசின் கணக்கு வழக்குகள் பி.ஏ.ஜி கமிட்டியிடம் வர உள்ளது. அவர்களின் ஊழல்களை நாங்கள் தோலுரித்துவிடுவோம் என்ற அச்சம் அ.தி.மு.கவினருக்கு உள்ளது. கடந்த முறை விஜயகாந்த் இந்தப் பதவியில் இருந்திருக்க வேண்டும். அவர் இதை விரும்பாததால், பண்ருட்டி ராமச்சந்திரன் பி.ஏ.ஜி தலைவராக இருந்தார். நான் அப்போது கமிட்டி உறுப்பினராக இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் அ.தி.மு.கவில் பண்ருட்டி ராமச்சந்திரன் இணைந்துவிட்டதால், பார்வர்டு பிளாக் கதிரவனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார்கள். இப்போது, முறையாக எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதவியை வழங்கியிருக்க வேண்டும். ' துரைமுருகனுக்கு அந்தப் பதவியை வழங்குமாறு' கடிதம் கொடுத்தார், செயல் தலைவர் ஸ்டாலின். 'அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்களை துரைமுருகன் அம்பலப்படுத்திவிடுவார்' என்ற அச்சத்தில்தான் அவருக்குப் பதவியை வழங்கவில்லை. அரசின் முடிவை எதிர்த்து 14 கமிட்டிகளிலும் பதவியேற்காமல் புறக்கணிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தில், சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்' என்றார் உறுதியாக. 

'அரசியல் நாகரிகத்தோடு அ.தி.மு.கவும் தி.மு.கவும் அவையை நடத்துகின்றன' என அரசியல் பார்வையாளர்கள் அகமகிழ்ந்து, 12 மணி நேரம் நிறைவடைவதற்குள், கணக்கு வழக்குத் தகராறில் வந்து நிற்கிறது. ' இந்த விவகாரத்தை ஓ.பி.எஸ் எப்படிக் கையாளப்போகிறார்?' எனக் கூர்ந்து கவனிக்கின்றனர் பேரவையின் எம்.எல்.ஏக்கள்.

-ஆ.விஜயானந்த்

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top