திருச்செந்தூர் கோயிலில் ராம மோகன ராவ் 'ரகசிய யாகம்'!
Uncategorized February 2, 2017,
திருச்செந்தூர்: முன்னாள் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாகம் நடத்தினார். ராவ் நடத்திய 'சத்ரு சம்ஹார யாகம்' எதற்கு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் கடந்த மாதம் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அவரது வீடு அலுவலகம் மட்டும் அல்லாமல் அவரது மகன் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையைத் தொடர்ந்து வருமானவரித்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் புகுந்து ஆய்வு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ராமமோகனராவ், தனக்கு எதிராக சதி நடப்பதாகவும் அதனை சட்டபடி எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக எந்த செய்தியிலும் அடிபடாமல் அமைதியாக இருந்து வந்தார் ராம மோகன ராவ். ஆனாலும், அவர் மீதான புகார் தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். விரைவில் அவர் மீது வழக்கு பாயும் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் வழக்குகளை எதிர்கொள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளை அவர் நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு குடும்பத்துடன் ரகசியமாகச் சென்று வழிபட்டு வருகிறார். இந்த நிலையில், சூரனை வதம் செய்த திருச்செந்தூர் முருகனை வழிபட்டு யாகம் செய்தால், வழக்குகளில் இருந்து விடுபடலாம் என அவருக்கு நெருக்கமான ஆனமீக பிரமுகர்கள் சிலர் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். அதுவும், சூரனை வதம் செய்த சஷ்டி தினத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினால், வழக்குகள் மற்றும் பிரச்னைகள் அனைத்திலும் இருந்தும் விடுபடலாம் என அவருக்கு சொல்லப்பட… திருச்செந்தூர் முருகன் கோயிலில் யாகத்தை நடத்தியுள்ளார் ராம மோகன ராவ்.
அதனால், நேற்று (பிப். 1ம் தேதி) மாலை அவர் திருச்செந்தூருக்கு மனைவியுடன் வந்தார். அவருடன் யாகம் நடத்துவதற்காக பட்டர் ஒருவரையும் அழைத்து வந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணிக்கு அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த அவர், கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து, சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றார். திரிசர் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது.
அதன் பின்னர், கோயிலில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தியாக பாறையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் எதிரில் சிறப்பு யாகத்துக்கான ஏற்பாடு நடந்துள்ளது. அதில் பங்கேற்று சத்ரு சம்ஹார யாகம் நடத்தி உள்ளார். இரண்டு மணி நேர யாக பூஜைக்குப் பின்னர் அவர் கோவிலில் இருந்து வெளியேறி உள்ளார். உள்ளூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான கோட்டை மணிகண்டன் என்பவர் இந்த யாகம் நடப்பதற்கு ராமமோகன் ராவுக்கு உதவி இருக்கிறார்.
இந்த யாகம் குறித்து கோவிலில் உள்ள பட்டர்கள் சிலரிடம் கேட்டதற்கு, ‘‘பொதுவாக சத்ரு சம்ஹார யாகம் என்பது சாமான்யமாக யாரும் செய்வதில்லை. மிகக்கடுமையான பாதிப்புகளில் இருப்பவர்கள் மட்டுமே இந்த யாகத்தை நடத்துவார்கள். இதற்கு முன்பு சில வி.ஐ.பி.க்கள் தங்களுடைய வழக்குகளின் பிடியில் நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது நடத்தி இருக்கிறார்கள். இப்போது ராமமோகன்ராவ் அந்த யாகத்தை நடத்தி இருக்கிறார்கள்.
இன்று சஷ்டி தினம் என்பதால், காலையில் கோவிலுக்கு சென்ற அவர், சூர சம்ஹார தரிசனம் பார்த்தார். அதன் பின்னர், திரிசரி அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அர்ச்சனைகளில் பங்கேற்ற பின்னர், சத்ரு சம்ஹார யாகத்தில் மிகவும் பக்தியுடன் பங்கேற்றார். எதிரிகளே இல்லாமல் அழித்து ஒழிப்பது., மிகவும் சிக்கலான வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவது மற்றும் கடுமையான உடல் நலப் பாதிப்பு ஆகியவற்றுக்காக இந்த யாகம் நடத்தப்படுவது வழக்கம். இவர் என்ன நோக்கத்துக்காக சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார் என்பது தெரியவில்லை’’ என்று முடித்துக் கொண்டனர்.
ராமமோகன் ராவ் கோவிலுக்கு வந்து யாகம் நடத்திய விவரம் அவர் வந்து சென்ற பிறகே போலீஸாருக்கும் தெரிய வந்துள்ளது. மிகவும் ரகசியமாக அவர் யாகம் நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
– ஆண்டனிராஜ்,
படங்கள் : ஏ.சிதம்பரம்.
Source: திருச்செந்தூர் கோயிலில் ராம மோகன ராவ் 'ரகசிய யாகம்'! – Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.