‘தற்காலிகம்தான்…நிரந்தரம் அல்ல!’ – சசிகலாவுக்கு செக் வைக்கிறதா ஆணையம்?
Uncategorized February 2, 2017,
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி குறித்த சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது. 'வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் சசிகலா நியமிக்கப்பட்டார். முறைப்படி தேர்தல் நடத்த வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தம்பிதுரை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. 'கட்சி விதிகளின்படி ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாதவர்கள், பொதுச் செயலாளர் ஆக முடியாது. 2011-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா. வரும் மார்ச் மாதம்தான் ஐந்தாண்டு நிறைவடைகிறது. கட்சி உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டுத்தான் பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்ய முடியும். கட்சியின் கொள்கை விதிகள் முறையாகக் கடைபிடிக்கப்படவில்லை' என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா. அண்மையில், இந்த மனு மீதான விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்திருக்கிறார் அவர். தேர்தல் ஆணைய விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "சசிகலாவுக்கு எதிரான மிக முக்கியமான ஆயுதமாக இதைக் கையில் வைத்திருக்கிறது மத்திய அரசு.
'காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலை விரைவில் நடத்தி முடியுங்கள்' என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அவர்களும், ராகுல் காந்தியை புதிய தலைவராக அறிவிப்பது குறித்து ஆலோசித்துவருகின்றனர். சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டபோதும், மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதைப் பார்த்து, விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது தேர்தல் ஆணையம். தற்போது சசிகலாவின் பின்னால், நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கின்றனர். எந்தப் பிளவும் இல்லை.
சசிகலா தலைமைக்கு எதிராக, கட்சியின் சீனியர்கள் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பவில்லை. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், 'நடராஜன், திவாகரன் ஆகியோரைக் கட்டம் கட்டுங்கள்' என்றுதான் கோரிக்கை வைக்கிறார். ஆனால், வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், 'கட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் தற்காலிக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்படுகிறார்' என்றுதான் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை உள்ளிட்டவர்கள் அறிவித்தார்கள். இவர்கள், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும்போது, 'முறைப்படி தேர்தல் நடத்தி பொதுச் செயலாளரை தேர்வு செய்தீர்களா?' என தேர்தல் ஆணையம் கேட்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
'இப்படியொரு சிக்கல் ஏற்பட்டால், நான் பார்த்துக்கொள்கிறேன்' என மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை, கார்டன் வட்டாரத்துக்கு உறுதி அளித்திருந்தார். அவரால் இந்த விவகாரத்தை மேற்கொண்டு முன்னெடுத்துச்செல்ல முடியவில்லை. மத்திய அரசின் கதவுகள் தம்பிதுரைக்காக திறக்கப்படவில்லை. அந்த அதிருப்தியைப் பகிரங்கமாகவே அவர் வெளிக்காட்டினார். 'மாநில அரசின் உரிமைப் பிரச்னைகளுக்காக பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. மன உறுத்தலாக இருக்கிறது' என அவர் பேசியதை, மன்னார்குடி உறவுகள் ரசிக்கவில்லை. இதையடுத்துதான், பா.ஜ.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார் நடராசன். டெல்லி லாபியை வலுப்படுத்தும் வேலையிலும் இறங்கியுள்ளார்" என்றார் விரிவாக.
"காங்கிரஸ் கட்சிக்கு ஆறு மாதங்கள் வரையில் அவகாசம்கொடுத்துள்ளது ஆணையம். இதே பாணியில் அ.தி.மு.கவுக்கு செக் வைக்கும் முடிவில் மத்திய அரசு உள்ளது. 'சசிகலா பொதுச் செயலாளராக செயல்படட்டும். உள்கட்சி விவகாரத்துக்குள் நாங்கள் செல்லவில்லை. ஆனால், கட்சி விதி 20(2)-ன்படி சசிகலா முறைப்படி தேர்வுசெய்யப்பட்டாரா?' என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இதை வலியுறுத்தி, அ.தி.மு.க சீனியர்கள் சிலர் மூலம் புகார் அனுப்பவைக்கும் வேலைகளும் நடந்துவருகின்றன. பொதுக்குழுவில் சசிகலா தேர்வு செய்யப்பட்ட தகவல்கள் எதுவும், ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது வரையில் அதிகாரபூர்வமாக தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகியாக சசிகலா இல்லை என்பதுதான் உண்மை. இதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றால், ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாதவர் பொதுச் செயலாளராக நீடிப்பதும் சட்டச் சிக்கலை உருவாக்கும்.
'முறைப்படி தேர்தல் நடத்தினோம்' என தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்தால், 'நாமினேஷன் தாக்கல் செய்வதற்காகச் சென்ற என் கணவர் லிங்கேஸ்வர திலகன் தாக்கப்பட்டார். இவர்கள் போட்டியிடுவதற்கான மனுவே கொடுக்கவில்லை' என புஷ்பா தரப்பில் வாதத்தை முன்வைக்கவும் தயாராக இருக்கிறார்கள். அ.தி.மு.க நிர்வாகிகள் இப்படியொரு தகவலை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம் என்பதற்காகத்தான், முன்கூட்டியே ஆணையத்தில் புகார் மனு கொடுத்திருக்கிறார் புஷ்பா. சசிகலாவுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரையும் தேர்தல் அதிகாரிகள் அப்படியே வைத்துள்ளனர். சமாஜ்வாதிக்கு விரைந்து தீர்ப்பு கூறியவர்கள், சசிகலா விவகாரத்தை நேரம் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளும் முடிவில் இருக்கிறார்கள். 'நியமனப் பொதுச் செயலாளரை நிரந்தர பொதுச் செயலாளராக ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா அல்லது முறைப்படி தேர்ந்தெடுங்கள் என அறிவுறுத்துமா?' என அரசியல் கட்சிகள் கவனித்துவருகின்றன. 2017 மார்ச் வரையில் பொதுச் செயலாளராக விதிகளின்படி பதவிவகிக்க முடியாதவர், தற்போது பொதுச் செயலாளராக நீடித்துக்கொண்டிருப்பதே சட்டப்படி தவறானது" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
– ஆ.விஜயானந்த்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.