தமிழக அரசு மாணவர்களை திசை திருப்புகிறது -திருமாவளவன்
Uncategorized February 2, 2017, 
மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் சட்டம் மாணவர்களை திசை திருப்புவதாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில்,'2017ம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்டம்' என்ற பெயரில் புதிய சட்டத்துக்கான மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. அதுபோலவே முதுநிலைப் படிப்புகளுக்கான சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் இயற்றப்படுவதால் தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதில்லை என தமிழக அரசு கூறியுள்ளது.
தற்போதுள்ள சேர்க்கை முறை கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர உதவியாக இருக்கிறது என்பதுபோல சிலர் பேசுகின்றனர். அது தவறு என்பதை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் புள்ளிவிவரம் எடுத்துக்காட்டுகிறது. 2014-15 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் வெறும் 37 பேர்; 2015-16 ஆம் ஆண்டில் அது 24 ஆகக் குறைந்துவிட்டது. மருத்துவப் படிப்பில் 95% இடங்களை தனியார் பள்ளி மாணவர்களே பெறுகிறார்கள். பள்ளிக் கல்வியும் மருத்துவக் கல்வியும் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்ற நிலையை மாநில அரசு உருவாக்கிவிட்டு, கிராமப்புற மாணவர்களுக்கு உதவவே சட்டம் கொண்டுவருகிறோம் என்பது ஏற்புடையதல்ல. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்தாமல், பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு அக்கறை காட்டாமல், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் குரல் கொடுக்காமல் இப்படி சட்டங்களை நிறைவேற்றுவது மாநில அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதற்காக மட்டுமே பயன்படும். இதை நம்பி தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகாமல் இருந்துவிட்டால் அவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது நுழைவுத் தேர்வு வேண்டாம் எனக் கூறுகிற மாநிலங்களுக்கு விலக்களிக்கும் விதமாக, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்" என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Source: தமிழக அரசு மாணவர்களை திசை திருப்புகிறது -திருமாவளவன் – Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.