'கச்சா எண்ணெய் நம்மீது பட்டால் என்னவாகும்?' எண்ணெய் அள்ளிய அஜீத் குமாரின் அனுபவம்

Uncategorized

கரையோரம் தேங்கியிருந்த அந்த எண்ணெய் கழிவுகளில் இருந்து  ’முதல்வன்’ படத்தில், ஒரு காட்சியில் அர்ஜுன் சேற்றுக்குவியலில் இருந்து எழுந்து வருவது போன்று எண்ணெய் சொட்டச் சொட்ட வெளியே வந்தான் அந்தச் சிறுவன். சுமார் 17 வயது இருக்கும். 'பெயர் என்ன?' என்று கேட்டதற்கு, 'அஜீத் குமார்' என்று சிரித்தபடியே பதில் வந்தது. எண்ணூர் துறைமுகத்துக்கு அருகே கப்பல்கள் மோதி ஏற்பட்ட விபத்தினால் சிதறிய எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் இயந்திரங்கள் காலை 10 மணிக்குத்தான் வரும். ஆனால் 9 மணியில் இருந்தே அஜீத்குமார் இயந்திரம்போல அதில் இறங்கி, தன் கையில் இருக்கும் வாளியால் எண்ணெய்யை அள்ளி அப்புறப்படுத்தும் பணியைத் தொடங்கியிருந்தான்.

அஜீத் அந்தக் கடலோரம் இறங்கும்வரை அவன் யார்? என்னவென்று கடலோரக் காவல்படையினருக்கு எந்தவித விவரமும் தெரிந்திருக்கவில்லை. எர்ணாவூர் பகுதியில் வசிக்கும் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவன். கடலோரம் இறங்கி எண்ணெய்யை எப்படி அள்ளுவது? என்று கடலோரக் காவல்படையினர் யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில், பக்கெட்டுகள் சகிதம் அவர்களைச் சூழ்ந்த சில மீனவர்களில் இவனும் ஒருவன். மீனவர்களின் வாழ்வாதாரம் கரையோரம் மீன் பிடிப்பதையே நம்பி இருப்பதால், தாங்கள் வாழ இதுதான் வழி என்று முன்வந்து களமிறங்கி இருக்கிறார்கள் இவர்கள்.

அஜீத், தனது அண்ணன், மாமா புடைசூழ கடலில் மீன் பிடித்துத் திரும்பினால், கிடைக்கும் மீன்களை விற்று நாளொன்றுக்கு 2,000 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் வெள்ளம், வர்தா புயல் என ஓவ்வொரு ஆண்டும் ஏதாவதொரு இயற்கைச்சீற்றம் ஏற்பட்டு தங்களது மீன்பிடி வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்பது அவனையும் சேர்த்து அங்கிருந்த பெரும்பாலான மீனவர்களின் குறையாக உள்ளது. இம்முறை செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட கப்பல் விபத்து வாழ்வாதாரப் பாதிப்புக்குக் காரணமாகியுள்ளது.
”எண்ணெய் அள்ளி எடுக்கிறோம்.பகுதியை சுத்தம் செய்கிறோம். வெளிய வந்து உடனே கழுவிடறோம். ரொம்ப நேரம் இருந்தா கைகாலில் ஒட்டிக்கொண்டு போகாம அப்படியே தங்கிடும். மத்தபடி இதில் எதுவும் பிரச்னை இல்லை” என்கிறான் அஜீத்.
ஆனால் கச்சா எண்ணெய், அப்பகுதி மீனவ மக்களின் உதவியுடன் மனிதர்களாலேயே எடுக்கப்படுவதில் பல சிக்கல்கள் உள்ளன. எண்ணெய்யை 100% முற்றிலுமாக அகற்றுவது சாத்தியமா? அப்படியே அகற்றப்பட்டாலும் அந்த எண்ணெயால் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது அதற்கடுத்தது. கடல்சார்ந்தும், கடல்வாழ் உயிரினங்களையே உணவாகவும் கொண்டு வாழும் கடலோரப்பகுதி மக்களுக்கு இந்த எண்ணெய்ப் படலம் பரவியதால், ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதற்கான விடை, அஜீத் போன்றவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

'கப்பலில் இருந்து வெளியேறிய இந்த எண்ணெய்யால் எந்தவிதப் பாதிப்பும் மக்களுக்கு இல்லை' என்று அரசுத் தரப்பும், எண்ணூர் துறைமுக அதிகாரிகள் தரப்பிலும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அவர்கள் உலகின் மிகப்பெரும் எண்ணெய்க் கசிவு விபத்தான மெக்சிகோ வளைகுடா ஆழ்துளை எண்ணெய் விபத்து பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. 2010-ல் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அமெரிக்கக் கடலோரப் பகுதிகள்,  கருப்பு திட்டுகளால் பாதிக்கப்பட்டிருந்தன. இங்கே 167 ஆமைகள் தற்போது சென்னை கடற்கரையோரங்களில் இறந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் 2010-2013-ம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க கடற்கரையோரம் இறந்து கிடந்த டால்பின்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சத்தை தாண்டும். அவை அத்தனையுமே எண்ணெய்க்  கசிவு பாதிப்பால் இறந்தவை என்பதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. எண்ணெய் பாதிப்பை பொறுத்தவரை மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரே நிலைதான்.

இந்த நிலையில், அஜீத் குமார் போன்ற களத்தின் நடுவே கச்சா  சூழ இருப்பவர்கள் என்ன மாதிரியான பாதிப்புகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? கச்சா எண்ணெயால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இருக்கும். எண்ணெய் கழிவுகள் தேங்கியிருக்கும் பகுதியில் அதன் நுண் துகள்கள் காற்றில் கலக்கும்பட்சத்தில் அதனை சுவாசிப்பதால் அதனைச் சுற்றி இருக்கும் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் கழிவுகள் தங்கியிருக்கும் மண்ணைத் தொடுவதால் கூட பாதிப்பு உண்டாகும். சருமத்தில் கச்சா எண்ணெய் படுவதால் சொரி, அரிப்பு, கொப்புளங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.மறைமுகப் பாதிப்பானது எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் இருக்கும் நீரை அருந்துவதாலும் அந்தப் பகுதியில் உணவுகளை உண்பதாலும் ஏற்படும். அதாவது எண்ணெய் பாதிப்பால் மீன்கள் இறக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை ஆனால் அந்த எண்ணெயைக் குடிக்கும் மீன்கள் உடலில் ரசாயனங்கள் அத்தனையும் நாள்பட்ட அளவில் சேர்ந்து மீனையே நஞ்சுத் தன்மையுடையதாக்கும், இந்த மீன்களை வாங்கி உட்கொள்வதும், அந்த பகுதி நீரில் குளிப்பதும், மது குடிப்பதை விடவும் ஆபத்தானது. புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது. இந்த தகவல்களை அமெரிக்க தேசிய கடல்பகுதி மற்றும் வெளிமண்டல ஆய்வு மையம் மெக்சிகோ வளைகுடா பெருவிபத்துக்குப் பிறகு தனது இணையதளத்தில் பதிவேற்றி இருக்கின்றது. 

இன்னமும் எண்ணெயால் பாதிப்பில்லை என்று கூறிக் கொண்டிருக்கப் போகிறதா அரசும் அதன் நிறுவனங்களும்?. சிந்தியது 20 டன்தான். இது மற்ற நாடுகளில் நடந்த விபத்தை விட மிகமிகக் குறைவு என்கிறது அரசு. 'என் மக்கள், நாளை மீன் பிடிக்க இன்று நான் இறங்கி சுத்தம் செய்கிறேன்' என்கிறான் அஜீத்குமார். ஆனால் 20 டன் எண்ணெய் கழிவுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு அங்கிருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்திலும் அதை உண்டு வாழும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கையில் ஒட்டியிருக்கும் எண்ணெய் கரையை அப்படியே அகற்றி விடுவதால் மட்டும் அதன் பாதிப்புகள் நீங்கி விடாது என்றும் அஜீத்துக்கு யாரேனும் சொல்லுங்களேன்.

-ஐஷ்வர்யா
படங்கள்: தி.குமரகுருபரன்   

Source: 'கச்சா எண்ணெய் நம்மீது பட்டால் என்னவாகும்?' எண்ணெய் அள்ளிய அஜீத் குமாரின் அனுபவம் – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top