'உரிமைகளைக் காத்தருளிய கலைவாணி'!- உருகவைத்த ஓ.பி.எஸ்ஸின் இரங்கற்பா

Uncategorized

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநரின் உரைக்கு நன்றி  தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்கு, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்துக்கு பதில் அளிப்பதற்கு முன்பாக, மறைந்த ஜெயலலிதாவுக்கு உருக்கமான கவிதை ஒன்றை வாசித்தார். அதன் விவரம்:

நிலவைக் காட்டிச் சோறூட்டி, – வாழ்ந்த
நிலத்தைக் காட்டிச் சீராட்டி, – பிறந்த
இனத்தைக் காட்டிப் பாராட்டி, –
அஞ்சாத நன்னெறிகளோடு,
துணிவு எனும் தேரோட்டி,

"பொங்குமணி மார்பெங்கே?
பொரு தடக்கை வாளெங்கே?
புறப்படடா என் மகனே !
எரியட்டும் இனப் பகை !
முறியட்டும் அவர்தம் மூடத்தனம்!"
– என்றே அறைகூவி அழைத்து,

ரத்தத்திலும், சித்தத்திலும்,
வீரச் செறிவூட்டிய,
வித்தகத் தலைவி எங்கள் தாய்,
புரட்சித் தலைவி அம்மா அவர்கள்!

கண்களில் கனவாய் மலர்ந்து,
கவிதையின் நயமாய் மிளிர்ந்து,
உதிரத்தின் சூடாய்த் திகழ்ந்து,
உணர்ச்சிகளின் சுடராய் ஒளிர்ந்து,

தமிழ் மொழியை,
தமிழ் மக்களை,
தமிழ்ப் பண்பாட்டை,
தமிழ்க் கலாசாரத்தை,
தமிழ்ப் பாரம்பர்யத்தை,
தமிழர்தம் உரிமைகளைக்
காத்தருளிய கலைவாணி ..!

தமிழ் மண்ணுக்குப் புத்துயிரூட்டிய
புதுமைப் பெண்ணரசி.. !
புண்ணியத் தாய் எங்கள் அம்மா!  
சோலைகளில் குளிர்ச்சியாய்
ஏழைகளின் இதயத்தில் நிறைந்து,

சாதி மத பேதங்களைக் கடந்து
அவர்படும் துன்பமெல்லாம் களைந்து,

ஒடுக்கப்பட்ட மக்களைக் கரையேற்றிய
கண்கண்ட தெய்வம்!

தடுக்கப்பட்ட நீதிகளைத்
தமிழர்க்குப் பெற்றுத்தந்த
காவல் தெய்வம்!

தலை நிமிர்ந்த தமிழ் இனத்தின்  
உரிமைக் குரலாய் ஒலித்த
ஒப்பிலா தெய்வம்… எங்கள் அம்மா!

தமிழருக்கு, தமிழ்நாட்டிற்கு
இனிமேல் துன்பம் இல்லை,  துயரம் இல்லை,
என்ற நிலையை எய்திட,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
கண்ட வெற்றிச் சின்னமாம்
இரட்டை இலையை  அலையாய் எழச் செய்து,
தன் தோளில் தமிழ்நாட்டைக் காத்து நின்ற இமயம்,
தன் திறத்தால் தமிழ்நாட்டைத்
தலை நிமிர்த்திய சிகரம்,
அருட் கொடையாய் இறைவன் அனுப்பிய
அன்பின் சின்னம்.
தமிழினமே போற்றி வணங்கும்
ஆற்றலின் வடிவம் எங்கள் அம்மா!

Source: 'உரிமைகளைக் காத்தருளிய கலைவாணி'!- உருகவைத்த ஓ.பி.எஸ்ஸின் இரங்கற்பா – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top