அ.தி.மு.க-வின் கொ.ப.செ ஆகிறாரா தீபா!? மன்னார்குடி வியூகம்

Uncategorized

‘ஜெயலலிதா போலவே இருக்கிறார், பேசுகிறார், சிரிக்கிறார், பால்கனியில் நின்று இரட்டைவிரல் காட்டுகிறார்…’ என்றெல்லாம் பேசிப்பேசியே ஓய்ந்துள்ளனர், தீபா ஆதரவாளர்கள். தற்போது தீபா என்னதான் செய்துகொண்டிருக்கிறார்? அவரது அரசியல் பயணம் எந்த நிலையில் இருக்கிறது?  ஜனவரி 17-ம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பின்போது, ‘‘மக்கள் கருத்தைக் கேட்டபின்னரே அரசியல் முடிவை அறிவிப்பேன். அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை என்பதால் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தேன்’’என்று சொல்லியிருந்தார்.

இதுகுறித்துப் பேசும் தீபா ஆதரவாளர்கள், ‘‘தலைவர் (எம்.ஜி.ஆர்) பிறந்தநாளில் தீபாம்மா ஏதாவது அறிவித்துவிடுவார் என்றுதான் நம்பி வந்தோம். அப்படி அறிவித்துவிட்டால், ஊருக்குப் போய் வேலைகளைத் தொடங்கியிருப்போம். இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்தப் பக்கமும் (சசிகலா) நாங்கள் போகமுடியவில்லை. தீபாம்மா பக்கமும் திருப்தியான பதில் இல்லை. தலைவர் ஆரம்பித்த கட்சியை அம்மா இத்தனை ஆண்டுகள் காப்பாற்றிவைத்திருந்தார். இன்று, கட்சி யாரிடம் இருக்கிறது என்றே தெரியவில்லை…’’ என்று புலம்புகின்றனர். ஆனாலும்கூட சோர்ந்துபோகாமல், அ.தி.மு.க. தலைமைக் கழகம், அண்ணாசாலை போன்ற இடங்களில் வாரத்துக்கு இரண்டுமுறை தீபா ஆதரவு போஸ்டர்களை ஒட்டிவருகிறார்கள். 

முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ஜே.சி.டி. பிரபாகரன், பூங்காநகர் கு.சீனிவாசன், திருச்சி செல்வராஜ்… உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் பெயர்கள், தீபா ஆதரவுப் பட்டியலில் இருப்பதாகத் தெரிகிறது.  ‘யார் மனதில் என்ன இருக்கிறது?’ என்ற கோணத்துடன் அனைத்துத் தரப்பிலும் பேசினோம்.

கே.பி.முனுசாமி தரப்பில்…

கே.பி.முனுசாமி தரப்பில் பேசியபோது, “தீபாவால் கட்சியை உறுதியாகக் கொண்டுபோக முடியாது. பேட்டியின்போது, ‘அம்மா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. பல நாட்கள் என்னுடைய சகோதரர் கூடவே இருந்தார்’ என்று சொல்லும்போதே, தீபா காலிப் பெருங்காய டப்பாவாகிவிட்டார்.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று வலிந்து அவரை சொல்லும்படி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அதில் நாங்கள் உடன்படவும் இல்லை. ஆனால், இதே தீபாதான், ‘என்னை அப்போலோவுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். எனக்கு நியாயம் வேண்டும்’ என்றார். பின்னர், ‘ஜெயலலிதா, என்னுடைய அத்தை. அவருக்கு கொடுக்கப்படும் மருத்துவச் சிகிச்சைகுறித்து எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும்’ என்றும் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாவால் கார்டனை விட்டு விரட்டப்பட்ட ம.நடராசன் இப்போது, ‘ஜெயலலிதாவை இவ்வளவு நாள் காப்பாற்றிக் கரைசேர்த்ததே நாங்கள்தான்’ என்று சொல்கிறபோது, ஒரு எறும்பு கடித்த சொரணையாவது தீபாவுக்கு வர வேண்டாமா? ஓ.பி.எஸ்-ஸிடம் இதை நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், ‘எந்தப் பஞ்சாயத்திலும் மாட்டாமல், ஐந்தாண்டுகள் முதலமைச்சர் பதவியை ஓட்டிக்கொண்டு போய் விடவேண்டும்’ என்று அவர் நினைக்கிறார். ஆனால், அந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கட்சி இருக்குமா என்ற கவலை அவருக்கு இல்லை. இப்போது பதவிக்காக ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் கவலை இல்லை. கட்சியை வளர்க்கவோ, காப்பாற்றவோ துரும்பைக்கூட நகர்த்தத் தயாராக இல்லாதவர்களின் கையில்தான் இன்றைக்கு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது. முதலில் தீபா வெளியில் வரட்டும். அவர் வெளியில் வருவதற்கும், வராமல் இருப்பதற்கும் ஒரு விலை இருக்கிறது” என்கின்றனர்.

​​​​​​​

செங்கோட்டையன் தரப்பில்… 

செங்கோட்டையனின் கொங்கு பக்கத்து ஆதரவாளர்கள் வாக்குமூலமோ தனிரகம்… “யாரு செங்கோட்டையனா, ஊருக்குள்ள சின்னம்மா, பெரியம்மான்னு ஒரு போஸ்டரை ஒட்டச் சொல்லுங்க பார்ப்போம். செங்கோட்டையனுக்கு மந்திரி பதவி கொடுக்கிறோம் என்று ஆசைகாட்டிதான் அவரை  கட்சிக்குள் வரவழைத்துக்கொண்டார்கள். செங்கோட்டையன் உள்ளே போன நேரம் ஓ.பி.எஸ் கை உயர்ந்துவிட்டது. அங்கே, சின்னம்மா சொல்லி போஸ்ட்டிங் கொடுக்கிறார்கள் என்ற நிலை பழைய கதையாகிவிட்டது. வளர்மதிக்குக் கொடுத்த பாடநூல் வாரியத்தோடு அது முடிந்துவிட்டது. நாலரை ஆண்டுகால ஆட்சி இருக்கிறது; மந்திரி பதவி கிடைக்கும் எனக் கருதித்தான் முதலில், ‘தீபா ஆதரவு’ என்று செய்தியைக் கசியவிட்டார். எதிர்பார்த்தபடியே நடராஜன் தரப்பு கூப்பிட்டுப் பேசவே, சமாதானமாகிவிட்டார். 

செங்கோட்டையனைப் போலவே செந்தில் பாலாஜியும் இன்னொரு பக்கம் காத்துக்கொண்டிருக்கிறார். அவரையும் கூப்பிட்டுச் சொல்லிவிட்டோம். தீபாம்மா சரிப்பட்டுவந்தால் பார்ப்போம். இல்லையென்றால், ஓ.பி.எஸ்-ஸிடம் தேதி கேட்டு ஒரு முடிவை அறிய இருக்கிறோம். பி.ஹெச். பாண்டியன், சைதை துரைசாமி, கே.பி.முனுசாமி போன்றவர்கள் எடுக்கும் முடிவும் எங்கள் முடிவும் ஒன்றுபோலத்தான் இருக்கும். எந்த முடிவாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலுக்குள் அந்த முடிவு இருந்தாக வேண்டும். இல்லையென்றால், நாங்களே அந்த முடிவை எடுத்துவிடுவோம். தலைவர் ஆரம்பித்து அம்மா காப்பாற்றிய கட்சியைப் பாழ்படுத்த விடமாட்டோம்.அம்மா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, கொங்கு மண்டலமும்  தென்மாவட்டங்களும் சேர்ந்து எடுக்கும் முடிவை அப்போது அறிந்துகொள்வீர்கள்” என்று மிரட்டலும், உள்குத்துமாகச் சொல்லி முடித்தனர்.

                           

பி.ஹெச்.பாண்டியன் தரப்பில்…

பி.ஹெச்.பாண்டியன் தரப்பு ஆதரவு வட்டத்தில் உச்சக்கட்ட ‘டெரர்’ காட்டுகிறார்கள்… “சசிகலாவோ, நடராஜனோ திடீர் முதல் அமைச்சர் ஆகிவிடாமல் கடிவாளம் போட்டுவைத்திருப்பது எங்கள் (பி.ஹெச்.பாண்டியன்) அய்யாதான். கட்சியின் அமைப்புரீதியான அத்தனை விவகாரமும் அய்யாவுக்கு அத்துப்படி. தவிர, தலைவர் காலத்திலும், அம்மா காலத்திலும் இல்லாத சாதியப் பார்வை இப்போதைய அ.தி.மு.க மீது இருக்கிறது. அய்யா இதை விரும்பவும் மாட்டார், விடவும் மாட்டார். தென் மாவட்ட நாடார்கள் மொத்தப் பேரும் கட்சியைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். தீபாவுக்கு படிப்பு, வயது, பண்பு அனைத்தும் இருக்கின்றன. அதனால், கட்சியை சிறப்பாகக் கொண்டுபோவார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தீபா சரிப்பட்டு வரவில்லை என்றால், எங்களின் அடுத்த இலக்கு, சாதியப் பார்வை இல்லாத ஓ.பி.எஸ்-தான். 

பொன்னையன் தரப்பில்…

தீபாவோ, ஓ.பி.எஸ்-ஸோ சரிப்பட்டு வரவில்லை என்றாலும் நாங்கள் சோர்ந்துவிட மாட்டோம். கட்சியைக் காட்டிக்கொடுக்கும் விதமாக மாற்று முகாமுக்குத் தாவவும் மாட்டோம். அப்போது நாங்கள் எடுக்கும் முடிவு, இனி அ.தி.மு.க-வில் யாரும்  சாதிக் கட்டமைப்பையே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்” என்கிறார்கள். பொன்னையன் ஆதரவு தரப்பிலோ, சோக மயம்தான். “பொன்னையன் அய்யா, சசிகலாவுக்கு எதிராக ரகசியமாகச் செயல்படுகிறார் என்று சொல்லி அவரை அவமானப்படுத்தி ஒதுக்கிவிட்டார்கள். பொதுக்குழுவிலும் அவரை மதிக்கவில்லை, எம்.ஜி.ஆர் பிறந்தநாளின்போதும் கட்சி ஆபீசுக்கு வந்தவரை  சீந்தவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவரை எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர். சசிகலா கும்பலை நம்பிப்போன பொன்னையன் அய்யா போல பலர் தங்கள் நிலையை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்” என்று உச்சு கொட்டுகிறார்கள்.

ம.நடராஜனின் மூவ் இதுதான்…

ம.நடராசன் தரப்போ, இத்தனை வாக்குமூலத்தையும் மிகவும் சாதாரணமாகவே பார்க்கிறார்கள், சிரிக்கிறார்கள், ரசிக்கிறார்கள்.
“தீபாவை இவங்கள்லாம் ஏதோ பெரிய பொலிட்டீஷியன் ரேஞ்சுக்கு யோசித்ததே முட்டாள்தனம். அந்தப் பொண்ணு காலையில பத்துமணிக்கு மேலதான் எழுந்து சூரியனையே பார்க்கும். குளிச்சுட்டு டிஃபன் முடிக்கறதுக்குள்ள நாங்க அசெம்பிளியில் முதல் செஷனையே முடிச்சிருப்போம். தீபான்னா யாரு, தீபக் என்றால் யாருன்னு இவங்களில் யாருக்காவது ஒரு வருஷத்துக்கு முன்னால தெரியுமா? எல்லாம் கட்சியைக் காட்டிக்கொடுக்கிறதுக்கு வேலைபார்க்கற கும்பல். எம்.என். (ம.நடராசன்) அய்யா இருக்கிறவரை ஒன்றும் நடக்காது. ஆரம்ப காலத்தில், ஜெயலலிதா வகித்துவந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை தீபாவுக்குக் கொடுத்து, அம்மா புகழ்பாடும் விதமாக டூர் அனுப்பிவைக்கவே திட்டம் வைத்துள்ளோம். கூடவே, எம்.பி பதவியும் தரப்படும். இது, தீபாவுக்கும் தெரியும். டெல்லியில் இருக்கும் எங்கள் பிரதிநிதி தம்பித்துரைக்கும் தெரியும். அதுக்கு ஆறேழு மாதங்கள் ஆகும். அதுவரைக்கும் தீபாவுக்கும் டைம்பாஸ், எங்களுக்கும் டைம்பாஸ் அவ்வளவுதான்’’ என்று அடுத்தடுத்த திட்டங்களைச் சொல்லி அதிரவைக்கின்றனர்.

தீபாவை மாற்று சக்தியாகக் கருதுகிறவர்களே, ஒருவேளை தீபா கொஞ்சம் சறுக்கினாலும் அதற்கும் மாற்று யோசித்துவைத்துள்ளனர். எல்லாவற்றுக்கும் விடை, பிப்ரவரி 24-தேதி தெரிந்துவிடும் என்று நம்புவோம்!

– ந.பா.சேதுராமன்

Source: அ.தி.மு.க-வின் கொ.ப.செ ஆகிறாரா தீபா!? மன்னார்குடி வியூகம் – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top