எம்.ஜி.ஆர் போல் கைக்கடிகாரத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா
ALADMK, jayalalitha, MGR, tamil nadu December 7, 2016,சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 1987, டிசம்பர் மாதம் 24 -ம் தேதி அதிகாலை எம்.ஜி.ஆர் மறைந்ததாக செய்தி வெளியிடப்பட்டது. பின்னர் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடமும் எழுப்பப்பட்டது. அதன் பிறகு நினைவிடத்திற்குச் சென்ற மக்களுக்கு யாரோ ஒருவர், எம்.ஜி.ஆரின் கைக்கடிகார ஓசை இன்னுமும் கேட்கிறது என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் எப்போதும் அணிந்திருந்த அந்த பெரிய ‘Rado’ கைக்கடிகாரம் அவருடனேயே புதைக்கப்பட்டதாகவும் அது இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சமாதியின் மீது காது வைத்துக் கேட்கும்போது அது ஓடும் சத்தம் காதில் விழுவதாகவும் சொல்லப்பட்ட அந்த செய்தியை தாங்கள் எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள்.
என்ன அதிசயமோ அது, இந்தச் செய்தி தென் தமிழகம் முழுவதும் பரவி கடிகார ஒலியைக் கேட்பதற்காகவே மக்கள் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சுற்றுலா வரத்துவங்கினர். இன்றும் எம்.ஜி.ஆர் சமாதியின் மீது லட்சக்கணக்கான பேர் காதுகொடுத்துக் கேட்க முயற்சிக்கிறார்கள், இருப்பினும் எம்.ஜி.ஆரை தகனமேடையில் வைத்தபோது, தலையில் தொப்பி, கண்ணாடி, வலது கையில் ஒரு கடிகாரம், கைவிரலில் ஒரு மோதிரம் ஆகியவற்றுடனே நல்லடக்கம் செய்தனர்.
அதேபோல் அவரை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு அரசியல் வாழ்வில் மகுடம் சூடிய ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது, கைகளில் வளையல் கைக்கடிகாரம், காதில் கம்மல் அணிந்த நிலையில் அவரது உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா இந்த மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் மக்கள் மனதை விட்டு மறையாது என்பது நிச்சயம்.
Source: எம்.ஜி.ஆர் போல் கைக்கடிகாரத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா – G-News

Leave a comment
You must be logged in to post a comment.