இரண்டாவது ‛ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் அறிமுகம்
India, kantheri, mumbai January 13, 2017,
மும்பை: எதிரிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத, அதிநவீன வசதிகள் உடைய, இரண்டாவது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலான காந்தேரி, நேற்று(ஜன.,12) அறிமுகம் செய்யப்பட்டது.
நம் கடற்படைக்கு, பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டிலேயே, ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஸ்கார்பியன் ரக முதல் நீர்மூழ்கி கப்பலான கல்வாரி, கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து, தற்போது, இரண்டாவது நீர்மூழ்கி கப்பலான காந்தேரி, தயார் நிலையில் உள்ளது.
மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ராணுவ இணையமைச்சர், சுபாஷ் பாம்ரே, இதை கொடியசைத்து துவக்கி வைத்தார். கடற்படை தளபதி, அட்மிரல் சுனில் லம்பா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பத்துடன், இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து, எந்தப் பகுதியில் உள்ள இலக்கையும் தாக்கக் கூடிய வசதிகள் உள்ளன. கடந்த, 17ம் நுாற்றாண்டில், கடல் பகுதியில் வலிமையை காட்ட, மராட்டிய மன்னர்கள் கட்டிய கோட்டையின் பெயர் காந்தேரி. அதை நினைவு கூரும் வகையிலேயே, இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு, ‘காந்தேரி’ என, பெயரிடப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு ஆண்டுக்கு, இது பல்வேறு பயன்பாட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பின்பே, கடற்படையில் சேர்க்கப்படும்.
கடற்படையின் வழக்கப்படி, ஒரு கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பலுக்கு வைக்கப்படும் பெயர், அந்தக் கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பலின் பயன்பாட்டு காலம் முடிந்ததும், புதிதாக சேர்க்கப்படும் கப்பலுக்கு வைக்கப்படும்.அதன்படி, காந்தேரி என்ற பெயரிலான போர்க் கப்பல், 1968ல் படையில் சேர்க்கப்பட்டு, 1989ல், படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.
Source: இரண்டாவது ‛ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.