புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு உதவிய நல் உள்ளங்கள்!
tami nadu September 15, 2018,
புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியாக, சேலத்தை சேர்ந்த ஏழை கர்ப்பிணி சர்மிளாவுக்கு கருவுடன் சேர்ந்து வளர்ந்த சதைக்கட்டி அகற்றப்பட்டது.
சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த ஏழைத்தம்பதி சதீஷ்குமார் – சர்மிளா. திருமணமாகி ஓராண்டு கடந்த நிலையில் சர்மிளா கருவுற்றார். ஆனால், கருவோடு சேர்ந்து சதைக்கட்டியும் வளர்ந்த்தால் இளம்பெண் சர்மிளா மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். விசைத்தறி கூலி வேலை செய்யும் சதீஷ்குமாருக்கு போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக புதிய தலைமுறை இணைய பக்கத்தில் செய்தி வெளியானது.
இதனையடுத்து, சேலத்தை சேர்ந்த வீ மீன் பவர் (we mean power) என்ற அமைப்பினர் சர்மிளாவிற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். இந்த அமைப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் சேலத்தில் இயங்கி வரும் ஆரோக்யா மருத்துவமனை நிர்வாகம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முன் வந்தனர். இதனையடுத்து கடந்த வாரம் சர்மிளாவுக்கு அறுவை சிகிச்சை செய்து கருப்பையில் இருந்த சுமார் ஆறு கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின் கருவை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் அந்த முயற்சி தோல்விடைந்தது. இருந்தபோதிலும், அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது சர்மிளா பூரண குணமடைந்திருப்பதாகவும், எந்த வித பிரச்னையும் இன்றி மீண்டும் அவர் கருத்தறித்து சுகபிரசவம் ஆக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர் ராணி வரதராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வாழ்வா, சாவா என்ற விரக்தியில் போராடிக் கொண்டிருந்த இளம்பெண் சர்மிளா பல நல்உள்ளங்களின் கூட்டு முயற்சியால் வாழ்வில் தன்னம்பிக்கையோடு புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
தகவல்கள் : மோகன்ராஜ் – செய்தியாளர்,சேலம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு உதவிய நல் உள்ளங்கள்!