கும்பகர்ணனை போல் தூங்குகிறதா தமிழக அரசு?: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
tami nadu September 15, 2018,
கும்பகர்ணனை போல் தூங்காமல், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பொது நூலகத் துறையையும், மாவட்ட நூலக துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக அறிவித்து தமிழக அரசு 1989-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. அதனையடுத்து மாவட்ட நூலகங்களில் முதல் நிலை நூலகர்களாக பணியாற்றியவர்கள், 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், மனுதாரர்களின் பதவி உயர்வுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது. பதவி உயர்வுக்கான விதிகளை வகுக்கவும் அறிவுறுத்தியது.

நூலகத்துறையில் பணியாற்றிய, மணிகண்டன், அசோகன் மாதேஸ்வரன் உள்ளிட்ட 4 பேர் கல்வித்துறைக்கு நேரடியாக நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில்,17 ஆண்டுகளுக்குப் பிறகு, தீர்ப்பாய உத்தரவுப்படி தற்காலிக பதவி உயர்வு விதிகளை வகுத்த தமிழக அரசு, அதன் அடிப்படையில் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரையும் 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றி உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து மனுதாரர்கள் தொடர்ந்த வழக்கில் குறித்த காலத்தில் பதவி உயர்வுக்கான விதிகளை வகுத்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது, நீதிமன்றத்தின் நேரமும் வீணடிக்கப்பட்டிருக்காது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இனி வரும் காலத்திலாவது கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டிருக்காமல் நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் அமல்படுத்தும் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலிக விதிகளை வகுத்த தமிழக அரசு மனுதாரர்களுக்கு வழக்குச்செலவாக தலா 25ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> கும்பகர்ணனை போல் தூங்குகிறதா தமிழக அரசு?: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி