முடக்கப்பட்ட ரேஷன் கார்டு: புதுப்பிக்க வாய்ப்பு
India, ration card April 25, 2017,
‘ஆதார்’ விபரங்கள் பதியாததால், முடக்கி வைக்கப்பட்ட ரேஷன் கார்டுகளை, புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பை, உணவு துறை வழங்கியுள்ளது.
தமிழகத்தில், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுக்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்பட்டன. நேற்றைய நிலவரப்படி, 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 1.31 கோடி கார்டுதாரர்கள், அனைவரின் ஆதார் விபரத்தையும் பதிவு செய்துள்ளனர். 56 லட்சம் பேர், பாதி பேரின் ஆதார் விபரங்களை பதிந்துள்ளனர்.
எஞ்சிய, 2.21 லட்சம் பேர், ஒருவரின் ஆதார் விபரத்தையும் பதிவு செய்யாததால், அவற்றை, உணவு துறை அதிகாரிகள் முடக்கி வைத்தனர். அவர்களால் ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை. இந்நிலையில், முடக்கிய கார்டுகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு ஆதார் விபரம் கூட பதியாத ரேஷன் கார்டுதாரர், பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது, ‘மொபைல் ஆப்’ பகுதிக்கு செல்ல வேண்டும்; அதில், ஸ்மார்ட் அட்டை விண்ணப்பம் என்ற பகுதியில், ‘க்ளிக்’ செய்தால், புதிய அட்டை விண்ணப்பம், பழைய குடும்ப அட்டை பதிவு என இருக்கும்.
அதில், பழைய அட்டை பதிவு பிரிவுக்கு சென்று, தங்களின் காகித ரேஷன் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். காகித ரேஷன் கார்டின் நகல், குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கிய பின், இறுதியாக, முடக்கப்பட்ட கார்டுதாரருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.