கணவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது ? இரு மனைவிகளுக்கும் உயர்நீதிமன்றம் புது உத்தரவு
tami nadu August 24, 2018,
இறந்த கணவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வது தொடர்பாக அவரது இரு மனைவிகளுக்கும் இடையே இரண்டு நாட்களுக்குள் உடன்பாடு ஏற்படாவிட்டால் அரசே அந்த உடலை அடக்கம் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு தங்கம்மாள், கவுரி என இரு மனைவிகள் உள்ளனர். கோலப்பாக்கத்தில் உள்ள கவுரி வீட்டில் வசித்து வந்த தட்சிணாமூர்த்தி ஆகஸ்ட் 16ஆம் தேதி மரணமடைந்தார். இதுகுறித்து சோமங்கலத்தில் உள்ள தங்கம்மாள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவர் உடலை இந்து முறைப்படி சோமங்கலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என தங்கம்மாள் கூறியுள்ளார்.
ஆனால் கிறிஸ்தவ முறைப்படி கோலப்பாக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தட்சிணாமூர்த்தி உயில் எழுதி வைத்துள்ளதாக கவுரி தெரிவித்துள்ளார். அதை ஏற்க மறுத்த தங்கம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் இருதரப்பிடமும் சமரசம் பேசியும் எந்தப் பயனும் இல்லை. இதனையடுத்து தட்சிணாமூர்த்தி உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தட்சிணாமூர்த்தியின் உடலை ஒப்படைக்கவும், இறுதிச் சடங்கு நடத்தவும் உத்தரவிடக்கோரி, தங்கம்மாள் மற்றும் கவுரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், இருதரப்பினரும் இரண்டு நாட்களுக்குள் சமரசம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். இருவருக்குள்ளும் சமரசம் ஏற்படாவிட்டால் தட்சிணாமூர்த்தி உடலை உரிமை கோரப்படாத உடலாகக் கருதி அரசே அடக்கம் செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கும் வருவாய்த்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> கணவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது ? இரு மனைவிகளுக்கும் உயர்நீதிமன்றம் புது உத்தரவு