“முதலமைச்சர் எடப்பாடி மீதான புகாரில் விசாரணை தொடங்கிவிட்டது” – தமிழக அரசு
tami nadu August 24, 2018,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் ஜூன் 22-ஆம் தேதியே முதற்கட்ட விசாரணை தொடங்கிவிட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த ஜூன் 18-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்தார். அதில் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான ஒப்பந்தங்கள் முதலமைச்சரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும் ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூன் 22-ஆம் தேதியே முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாக பதிலளித்தார்.

விசாரணை தொடங்கப்பட்டு 2 மாதங்களாகியும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என வாதிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> “முதலமைச்சர் எடப்பாடி மீதான புகாரில் விசாரணை தொடங்கிவிட்டது” – தமிழக அரசு