ஜெயலலிதா மரண விவகாரம்: பெண் எம்.பி.,யை கண்டித்த குரியன்
India, jayalalitha, kurian, MLA, New delhi March 10, 2017,
புதுடில்லி: ராஜ்யசபாவில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த எம்.பி., மைத்ரேயன் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காக, அதிமுக பெண் எம்.பி.,விஜிலாவுக்கு அவை துணைத்தலைவர் குரியன் கண்டனம் தெரிவித்தார்.
கோரிக்கை:
ராஜ்யசபாவில் ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மைத்ரேயன் பேசியதாவது: ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணம் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக முரண்பட்ட அறிக்கை வருகிறது. இதனால் சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விஜிலாவுக்கு குரியன் கண்டனம் :
மைத்ரேயன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜிலா எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார். ராஜ்யசபா துணைத்தலைவர் குரியன், விஜிலாவிடம் அமரும்படி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டார். ஆனால், விஜிலா அதை கேட்காமல், தொடர்ந்து சத்தம்போட்டு பேசிக்கொண்டேயிருந்தார். இதனால் கோபமடைந்த குரியன், விஜிலாவுக்கு கண்டனம் தெரிவித்தார். ஒரு உறுப்பினர் பேசும்போது நான் கவனித்தால் தான், அவர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியும். இப்படி இடையூறு செய்தால் நான் எப்படி அவர் பேசுவதை கவனிக்க முடியும்.நான் எழுந்து நின்று கூறியபிறகும், நீங்கள் அமர மறுக்கிறீர்கள். தொடர்ந்து அநாகரீகமாக நடக்கிறீர்கள். அவை மரபுக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது. ஒரு பெண் என்பதால், கண்டிப்பதோடு நான் விடுகிறேன். இதையே, ஓர் ஆண் உறுப்பினர் செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன். நீங்கள் என் சகோதரி போன்றவர். இப்படி செய்யக்கூடாது. தயவு செய்து அமருங்கள். இவ்வாறு குரியன் பேசினார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.