இடைமறித்து அழிக்கும் ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை

balasore, India, indian rocket, satellite

பாலசோர்: உள்நாட்டிலேயே தயாரான, இடைமறித்து அழிக்கும், அதிநவீன ஏவுகணை நேற்று(மார்ச் 1), வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உயரதிகாரி, ஒடிசா மாநிலம், பாலசோரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த, ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக நேற்று, எதிரி ஏவுகணையை இடைமறித்து அழிக்கும், அதிநவீன ஏவுகணை, ஒடிசா மாநிலம், பாலசோரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிபயங்கர ஏவுகணைகளையும், இடைமறித்து, தாக்கி அழிக்க வல்லது.

பாலசோரில், சந்திப்பூர் அருகே, ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து, பிருத்வி ஏவுகணை, சோதனைக்காக செலுத்தப்பட்டது. அந்த ஏவுகணை கிளம்பி, நான்கு நிமிட இடைவெளியில், வங்காள விரிகுடாவில், அப்துல்கலாம் தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த, ஏ.ஏ.டி., எனப்படும், வான் பாதுகாப்பு தடுப்பு கருவியாக திகழும், அதிநவீன ஏவுகணை செலுத்தப்பட்டது.

இலக்காக நிர்ணயிக்கப்பட்ட, பிருத்வி ஏவுகணையை, மிகத் துல்லியமாக, நடுவானில் இடைமறித்து, ஏ.ஏ.டி., ஏவுகணை தாக்கி அழித்தது. இவ்வாறு உயரதிகாரி கூறினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top