சிலை கடத்தல்: கடலூரில் 5 பேர் கைது
chennai, cuddalore, tamil nadu, tamil nadu police February 24, 2017,சென்னை: கடலூரில் ஐம்பொன் விநாயகர் சிலையை திருடி கடத்த முயன்ற ஐந்து பேரை, துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சிலை திருட்டு:
நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார் கோவில் அருகே உள்ள மங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்ராஜா. இவர் மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து ஒன்றரை அடி உயரமுள்ள வினாயகர் சிலையை திருடியுள்ளார். அந்த சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய, புதுச்சேரி, அரியாங்குப்பத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை , கடலூரை சேர்ந்த முகுந்தன் சர்மா என்பவர் மூலம் தொடர்பு கொண்டார். இவர்கள் கடலூரில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
கடலுாரில் சுற்றிவளைப்பு:
அதன்படி ஹோண்டா சிட்டி காரில் ராஜா, மயிலாடுதுறையை சேர்ந்த வினோத், தரங்கம்பாடியை சேர்ந்த செந்தில்வேலன் ஆகியோர் கடலூருக்கு வந்தனர். அரியாங்குப்பத்தில் இருந்து ஞானசேகரன் ஒரு காரில் கடலூர் வந்தார். அவர்கள் முகுந்தன் சர்மாவை கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் சந்திக்க திட்டமிட்டு இருந்தனர்.
இந்த தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மற்றும் போலீசார் கடந்த, இரண்டு நாட்களாக கடலூரில் தங்கியபடி கண்காணித்து வந்தனர். இன்று, ஐந்து பேரையும் கடலூரில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஐம்பொன் விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். அந்த சிலையின் மதிப்பு, நான்கு கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.